புதன், 7 செப்டம்பர், 2022

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 



ஒரு நாட்டின் இயல், இசை, நாடகம் சீர்குலைந்தது என்றால் அதற்குக் காரணம் பிறமொழிக் கலப்புத்தான் என்று கிரேக்க நாட்டு அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். ஒரு நாட்டின் மொழி நன்னிலை பெற்று உயர வேண்டுமெனில் அந்த மொழி பேசும் இனம், அந்த இனத்தின் கலை, அந்த இனத்தின் நாடு தனித்தியங்க வேண்டும் என்பது தெளிவாகிறது. மறைமலையடிகள் காலத்தில் பிறமொழி வரவால் தூய தமிழ்மொழி அழிந்து விடுமோ என்னும் நிலை ஏற்பட்டது. பிறமொழிகளின் மீதுள்ள ஆர்வத்தாலும், விருப்பத்தாலும் தமிழுக்குரிய சிறப்புகள் மறுக்கப்பட்டன.

ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் இனத்தாரை விட்டு நீங்காதும், அவர்தம் நாட்டில் பிறமொழி பேசுவார் வந்து புகாதும் இயங்கும் வரையில் அயல்மொழிச் சொற்கள் கலப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், பன்னெடுங்காலமாகப் பிறநாட்டாருடன் தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். எனவே, அந்நாட்டினரின் பழக்கங்களும், பண்பாடுகளும் தமிழரிடையே கலந்தன. “ஒருவர் நாகரிகத்தை மற்றொருவர் பின்பற்றும்போது மொழியிலும் கலப்பேற்படல் இயற்கையே” என்பார் மறைமலையடிகள்.

உயர்ந்த கருத்துக்களமைந்த தமிழ் நூல்கள் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அக்கருத்துக்களனைத்தும் வடமொழி நூல்களிலிருந்தே தமிழர் பெற்றதாகச் சொல்லப்பட்டது. தொல்காப்பியருடைய இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும் தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வடநூற் கருத்துக்களைத் தழுவியன என்றும் கூறினர். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்று ஆக்கியதோடு அமையாது திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்ம சாத்திரத்தையும் பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும் காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவின என்று கூறவும் தலைப்பட்டனர்.

1838இல் இந்தியா வந்து, மொழியாராய்ச்சியில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பண்படுத்தப்பட்ட மொழி ஆறும், பண்படுத்தப்படாத மொழி ஆறுமாகத் தெளிவான திராவிட மொழிகள் பன்னிரண்டு என்று கண்டு அவற்றை ஒப்புநோக்கி ஆழ்ந்து ஆராய்ந்து திராவிடம் ஆரியத்திற்கு முந்தியதென்றும், திராவிடச் சுட்டெழுத்துக்களினின்றே ஆரியச் சுட்டுச் சொற்களெல்லாம் தோன்றியுள்ளனவென்றும், திராவிடத்திற்குள் முந்தியதும் முதன்மையானதும் தமிழேயென்றும் தக்கசான்று கொண்டு தெள்ளத் தெளியவும் திட்டவட்டமாகவும் நிறுவி உலகிற்கு முதன்முதல் எடுத்துக்காட்டியவர் கால்டுவெல் ஆவார்.

ஆங்கில மொழியில் எவ்வளவு பிரிட்டிஷ் சொற்கள் உண்டோ அவ்வளவு திராவிடச் சொற்கள் வடமொழியில் உண்டு என்றார் கால்டுவெல். அன்றியும் தமிழ்ச்சொல்லா வடசொல்லா என்று ஐயுறத்தக்க நிலையில் உள்ள சொற்களையெல்லாம் அக்காலத்தில் தயங்காமல் வடசொல் என்று கூறினார். வடமொழி நிகண்டு நூலாரும் இலக்கண நூலாரும் தமிழ்ப்புலவர்களைப் போல் நடுவுநிலையுடன் சொற்களை ஆராயாமலே எல்லாவற்றையும் வடசொல் என்று கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்று அக்கால மொழியின் நிலையினை விளக்குகின்றார் கால்டுவெல்.

தனித்தமிழ் இயக்கம்: நோக்கமும் காரணங்களும்

எம்மொழியாயினும் பிறசொற் கலப்பின்றி வழங்கப்படல் வேண்டுமென்றும் அப்போதுதான் மொழிகள் நிலைபெற்று வாழுமென்றும் மறைமலையடிகள் நம்பினார். அடிகள் எம்மொழியையும் வெறுத்தவரல்லர். தமிழ், ஆங்கிலம், வடமொழி போன்ற மொழிகளில் வல்லவரான அவர் ஒவ்வொரு மொழியும் தூய்மையுடன் காக்கப்பட வேண்டுமென்பதில் அக்கறை காட்டினார். அடிகளின் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு, பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் போன்ற அறிஞர்களின் பாராட்டைப்பெற்றது. தமிழில் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று வெளிவந்துள்ள என்றும் அவற்றுள் அடிகளின் மொழபெயர்ப்பே சிறந்ததென்றும் வடமொழி அறிஞர்களே பாராட்டுவார்.

தனித்தமிழ் இயக்கம் ஒரு மொழிக்கு எதிராகவோ, ஒரு வகுப்பாரின் பேரிலுள்ள வெறுப்பாலோ ஏற்பட்டிருப்பதாகக் கருதுவது தவறு என்பதைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் சோமலெ விளக்குகின்றனார். அமைச்சு, மொழி, ஆண்டு போன்ற சொற்கள் மந்திரி, பாஷை, வருஷம் என்ற வடமொழி சொற்கள் மூலமே அதிகம் கையாளப்படுகின்றன. அவ்வாறு இருக்க தமிழ்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து வருவதைக் கண்ட மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

எந்நாட்டிலும் நாட்டுத் தாய்மொழிக்கு எதிர்ப்பில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே தாய்மொழி ஒதுக்கப்பட்டது. தொல்காப்பியர் காலத்திருந்த தூய தமிழ் வழக்கற்றுப்போக வடசொற்கலப்பு மிகுந்த தமிழே எங்கும் கையாளப்பட்டது. வடசொற் கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க முடியாது என்று பேசப்பட்டது. அதனைக் கேட்ட அடிகள் தூய தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என்பதை உணர்த்தவே தனித்தமிழ் இயக்கம் கண்டார் (செந்தமிழ்ச் செல்வி, தலையங்கம், 1970)

வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களில் வடவெழுத்து இன்ன தமிழ் எழுத்தாகும் என்று விரிவான ஒலிமாற்று விதிகள் கூறுவதற்கு வழிகாட்டியாக விளங்கியது சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியம் ஆகும் என்பார் வ.சுப. மாணிக்கனார் (சிந்தனைக் களங்கள்). ஒரு கருத்தோ அல்லது இயக்கமோ ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்பு அல்லது அறிவுத்திறன் அடிப்படையில் தோன்றியது இல்லை. அது எந்தளவு சமுதாயத்தால் ஏற்கப்படுகிறதோ அப்போதுதான் அக்கருத்து உறுதியாகிறது. அதற்குப் பல சூழல்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாத இயக்கம் போன்றன குறிப்பிடத்தக்கது. அதேபோல தனித்தமிழில் எழுதுவதும் பேசுவதும் என்ற கோட்பாடு 20ஆம் நூற்றாண்டளவில் முன்வைக்கப்பட்டது.

தொல்காப்பியம் தொடங்கித் தமிழ் இலக்கண நூல்கள் தமிழில் இருப்பினும் பின்னர் வந்த இலக்கண நூலாசிரியர்கள் வடமொழியின் தாக்கத்தால் தமிழ்மொழி சமஸ்கிருதத்தின் அடியொற்றி வளர்ந்தது என்று கூறலாயினர். இதனைத் தொடர்ந்து கூறியும் எழுதியும் கொண்டிருந்தனர். அதன்பின்னர் 19ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

திராவிட மொழிகளில் தமிழ்தவிர மற்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றன அளவுக்கு மீறி சமஸ்கிருதச் சொற்களைக் கடன்வாங்கியுள்ளன. அவற்றுள் அவை இரண்டறக் கலந்தன. எனவே, அவற்றில் இருந்து விடுபடல் என்பது இயலாதது. ஆனால் தமிழில் உள்ள சமஸ்கிருதச் சொல்லாடல்களை நீக்கி நோக்கும்போது அவை தனித்து வாழும் தன்மையுடையதாக விளங்குகின்றது.

வின்சுலோ என்னும் ஐரோப்பிய நாட்டார் 1862இல் வெளியிட்ட தமிழ் அகராதியில், சிலர் கருதுவதுபோல இந்தியாவின் சில மொழிகளைப் போன்று அது சமஸ்கிருதத்தின் குழந்தையன்று. அதன் இலக்கணம் சமஸ்கிருதத்தோடு ஒத்திருப்பினும் அம்மொழியின் தனித்திறம் அதனைப் பெரிதும் வேறுபாடுடையதாக வைத்துள்ளது என்று புகழாரம் சூட்டுகிறார்.

தனித்தமிழ் ஆதரவும் எதிர்ப்பும்

தனித்தமிழில் படைப்புகளும் கருத்துகளும் வெளியிட வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்தபோது அவை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட மொழி வடிவத்தை (பிறமொழி கலந்து) இதுநாள்வரை பின்பற்றிவிட்டுப் புதியதாக ஒருநடையை அதிலும் பிறமொழி கலப்பில்லாத ஒரு நடையினைப் பயில வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர் இதனை ஏற்றுக்கொண்டனர். இந்நடைமுறை ஏற்றுக்கொள்ள இயலாத முறை என்றும் வாதிடுவோரும் இருந்தனர். 

ஞானப்பிரகாசர்

தருக்க சாஸ்திரச்சருக்கம் என்ற நூலினை எழுதியவர். இந்நூலுள் தனித்தமிழ் நடையை மேற்கொள்ளவில்லை என்று கூறுகிறார். அதற்கான காரணமாக, வடசொற்களை அடியோடு நீக்கிவிட்டால் தருக்கம், சாத்திரம் போன்ற நூல்கள் அழிந்துவிடும். எனவே, வடசொல் கலந்தே இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்றும் அறியில் சொற்கள் வடசொற்கள் கலந்தே எழுதப்பட வேண்டும் என்பதும் அவரது கொள்கையாக இருந்தது.

உ.வே.சாமிநாதர்

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் என பலவற்றைத் தன் வாழ்நாளில் தேடியலைந்து தொகுத்தவர். இவரின் உரைநடையில் பல்வேறு வடமொழிச் சொற்கள் இருந்தன என்பர் அறிஞர்கள். தம் குறுந்தொகை ஆராய்ச்சி உரையுள் நூலாராய்ச்சி என்னும் தலைப்பில் நாற்பத்து நான்கு சொற்களை வடசொற்களாகக் காட்டுகிறார். அவற்றுள் அகில், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கலாவம், காமம், காலம், குணன், குவளை சகடம், சூலி, சேமம், சேரி, தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், பக்கம், பணிலம், பருவம், பவழம், மண்டிலம், மண், மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம் என்னும் முப்பத்தேழும் தென் சொற்களாம் என்று தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலமும், சமஸ்கிருதமும் மொழி வழக்கில் பலரிடமும் வந்துள்ள நிலையில் அவற்றை நீக்கித் தனித்தமிழில் பேசவும், எழுதவும் முற்படுவது சரியாகாது என்பது இவர் கருத்து. அவ்வாறு தனித்தமிழ் நடையை ஏற்கும்போது தாம் கூறவந்த கருத்து சரியாகச் சென்ற்டையாது என்பது ஒரு குறைபாடாக அமைந்துவிடும் என்று கூறுகிறார்.

வழக்கில் கலந்து சொல்கின்ற தமிழ்ச்சொல் ஒன்றை மாற்றித் தனித்தமிழில பயன்படுத்தும்போது அது மக்கள் வாகிற்கு வருவதற்குப் பல்லாண்டுகள் ஆகும். எனவே, இம்முயற்சி தேவையற்றது என்பதனையும் கூறி இதற்கு எதிர்ப்பு காட்டினார்.

தனித்தமிழ் ஆதரவு

திரு.வி. கலியாணசுந்தரனார்

திரு.வி.க. இந்திய விடுதலை இயக்கத்தில் பெரிதும் செயல்பட்டவர். மேலும், தொழிற்சங்கத் தலைவர், தமிழாசிரியர், பத்திரிக்கையாளர், சொற்பொழிவாளர் எனப் பல்வேறு பரிமாணங்களில் திகர்நதவர். ஆராய்ச்சி நூல்கள் யாவும் எழுதியுள்ளார். மறைமலையடிகளார் கொண்டுவந்த தனித்தமிழ் நடை பற்றி மிகத் தெளிவான புரிதலோடு இருந்தவர். தான் எழுதிய நூல்களலும், நடத்திய இதழிலும் (தேசபக்தன்) இயன்ற அளவு தனித்தமுர் நடையைக் கையாண்டார்.

திரு.வி.க.வும் மறைமலையடிகளும் ஒரே கருத்தினை உடையவர். இருப்பினும் திரு.வி.க.வின் மொழிநடையில் சிற்சில இடங்களில் வடசொற்களைக் காணமுடிகிறது என்பார் மா.ரா. இளங்கோவன். அதோபோல், பாவாணர் தம்முடைய கருத்தைக் கூறும்போது, பிறமொழிபோல் மணிப்பவள மாலையும், பன்மணிக்கோவையுமாக இல்லாமல் வடசொல் மிகக்குறைந்தே வரப்பெறுகிறது என மறைமலையைம் திரு.வி.க. வையும் ஒப்பிட்டுக் கூறுவார்.

மு. கதிரேசன்

கலப்பின்றி எழுதப்படும் மொழியில் ஏற்படும் சுவை கலப்போடு எழுதப்படும் மொழிக்க இருப்பதில்லை எனும் கருத்துடையவர் கதிரேசனார். இருமொழியிலும் புலமைமிக்கவர். பண்டிதமணி என அனைவராலும் அழைக்கப்படுபவர். பழந்தமிழ் இலக்கியங்களில் வடமொழிக் கலப்பில்லை எனும் மறமைலையடிகளின் வாதத்தை எதிர்த்தவர். தாம் எழுதிய சமயக் கட்டுரைகளிலும் தனித்தமிழ் நடையை முழுமையாகக் கையாண்டவர்.

பா.வே. மாணிக்கனார்

பா.வே. மாணிக்கனார் பொறியியல் வல்லுநர். அரசுப்பணியில் இருந்தவர். தமிழில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவர். “தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம்” எனும்ஆய்வு நூலைப் படைத்தவர். தமிழே உலக முதன்மொழி என்பதனை ஆராய்ந்து அறிந்தவரும் அதனை அஞ்சாது எங்கும் பறைசாற்றியவருமானவர் என பாவாணர் புகழ்ந்துரைப்பார்.

பல்வேறு அறிவியல் கலைச்சொற்கள் தமிழில் இல்லாமையைக் கண்டு அதனைத் தனித்தமிழில் எழுதவேண்டும் என வலியுறுத்தியவர். ஐரோப்பிய, ஆங்கிலேயர் கூட தங்கள் மொழியிலே அதனைக் கூற முற்படும்போது எப்போதும் இளமையான தமிழ்மொழியில் சொற்களுக்கா பஞ்சம். அதனை ஏன் பிறமொழியினின்று இரவல் பெற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர்.

ந.மு. வேங்கடசாமி

திருச்சியில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தம் பேச்சாற்றல் மூலம் நாவலர் எனும் பட்டம் பெற்றவர். கபிலர், நக்கீரர், வேளிர் வரலாறு போன்ற நூல்களை எழுதியவர். தமிழ்மொழியைக் கையாளும்போது தவறியேனும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது எனும் வழக்கம தமிழ்மக்களிடம் வளரவேண்டும். அவ்வாறு பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துமநிலை வரின் அச்சொலுலுககு நிகரான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த முனைய வேண்டும். தவறியேனும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

சோமசுந்தர பாரதியார்

அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வழக்கறிஞர், பேச்சாற்றல் மிக்கவர். திருவள்ளுவர், சேரர் பேரூர், சேரவேந்தர் தாயவழக்கு, தயரதன் துறையும் கைகேயி நிறையும், நற்றமிழ் முதலிய நூல்களை எழுதியவர்.

இவர் படைப்புள் அனைத்திலும் தூய தமிழையே கையாணட்ர். தமிழில் புதுச்சல் படைக்க இயலவில்லை எனில் தமிழ்மரபுக்கேற்ப மாற்றி அதனை ஏற்றுக் கொள்ளலாம் என வலியுறுத்தியவர். பயன்படுத்தும்போது தமிழ எழுதித்தியல்மரபு, மொழி மரபுக்கு பிறழா வகையில் மாற்றிவழங்க வேண்டும. புள்ளி வைத்த எழுத்துக்களை முலாகக் கொண்டு எழுதும் பிறமொழிநடையை அறவே ஒதுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அ. சிதம்பரநாதன்

அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப்பேராசிர்ய, மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வர். நாடறிந்த தமிழறிஞர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கத்தில் மிக்பெரும் பங்காற்யிவர். அவற்றில் உள்ள தமிழ்ச்சொற்கள் தனித்தமிழில் உள்ளன குறிப்பிடத்தக்கது.

வடமொழி நீக்கித் தனித்தமிழில் எழுத முற்படுவதால் பிறமொழியின் மீது வெறுப்பு என்பது ஆகாது. தமிழ்மொழியோடு பிறமொழி கலந்து பேசும் வழக்கம் தொடர்ந்தால் பிற்காலத்தில் தமிழ்ச்சொற்கள் அழியும் நிலை ஏற்படும். அல்லது வடமொழியீல் இருந்து தமிழ் பிறந்தது என்ற கருத்து புனையப்படும் என்பதனாலேயே தனித்தமிழ் கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார்.

மகிழ்நன்

க.ப. சந்தோசம் எனும் பெயரை மறைமலையடிகள் தொடர்பற்குப் பிறகு மகிழ்நன் என மாற்றிக் கொண்டார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மகிழ்நன் கட்டுரைகள் என வெளிவந்துள்ளது. வடக்கும் தெற்கும் என்ற இவரது நூல் மிகு சிறப்பு வாய்ந்த நூல். தூய தமிழில உரைநடைப் பாடங்களை எழுதியும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும் நற்றமிழ் தொண்டாற்றியவர் என பாவாணர் புகழ்ந்துரைப்பார்.

இளவழகனார்

பாலசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்திற்குப் பிறகு இளவழகன் என மாற்றிக்கொண்டார். மறைமலையடிகளின் திருவொற்றியூர் மும்மணிக்கோவை நூலுக்கு உரை எழுதியவர். சங்க இலக்கிய இன்கவித் திரட்டு, சங்கநூற் கட்டுரைகள், பண்டைத்தமிழர் இன்பியல் வாழ்க்கை, பண்டைத்தமிழர் பொருளியல் வாழ்க்கை, மறைமலை அடிகளார் வரலாற்று மாட்சி முதலிய நூல்களை எழுதியவர். முல்லைக்கொடி எனும் இதழ் நடத்தியவர். தம் வாழ்நாள் இறுதிவரை தனித்தமிழ்க் கொள்கையில் பற்றுகொண்டிருந்தவர்.

மா. இராசமாணிக்கனார்

வரலாற்று அறிஞர், இலக்கிய ஆராய்ச்சியாளர். பல்லவர் வரலாறு, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி முதலிய நூல்களை எழுதியவர். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். பேச்சுத்தமிழ்தான் எழுத்து மொழிக்கு அடிப்படை. எனவே, பேச்சுத் தமிழைத் தனித்தமிழில் பேச வேண்டும என்னும் கோட்பாட்டைக் கொண்டவராக விளங்கினார். அப்போதுதான் எழுத்துநடை சிறப்புற விளங்கும் என வலியுறுத்தினார்.

பிறமொழியை ஏற்பது நம் தாயை நாமே கொலைசெய்வதற்குச் சமமென்றும், பெண்ணின் கற்புபோல மொழியும் காக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சி. இலக்குவனார்

தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறள் உரை முதலான நூல்களை எழுதியவர். குறள்நெறி எனும் தனித்தமிழ் இதழ் நடத்தினார். லட்சுமணன் எனும் தம் பெயரை அவரது ஆசிரியர் சாமி. சிதம்பரனார் இலக்குவன் என்று அழைத்தமையால் அதனையே தம்முடைய பெயராக மாற்றிக் கொண்டார்.

வ.சுப. மாணிக்கம்

காரைக்குடி அழகப்பர் கல்லூரி முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எனப் பணியாற்றியவர். வள்ளுவம், தமிழ்க்காதல் முதலிய நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்தளித்துள்ளார்.

தனித்தமிழியக்கத்தைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை எழுதியுள்ளார். தனித்தமிழ் இயக்கம் எம்மொழியைக் கற்பதற்கும் எதிரானதன்று. இதன்ஒரே நோக்கம்உலக முதற் செம்மொழிகளில் ஒன்றான தமி அதன் இயல்பில் வளர்ப்பதே இதன் நோக்கமாகும் என்பதனைக் கூறியுள்ளார்.

மு.வ.

சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். திறனாய்வு, மொழிநூல், மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, நாவல்கள், கட்டுரைகள் என பல நூல்களை இயற்றியுள்ளார்.

எவ்வகையினும் ஒரு சில சொற்கள் பிறமொழியிலிருந்து வந்து கலவாமல் ஒரு மொழி நிலவுதல் அரிது. கலைச் சொற்களாக உள்ள பிறமொழிச் சொற்களை எந்த மொழியும் ஓரளவு கடன்வாங்க வேண்டியுள்ளது. இருப்னும் அதனை வேண்டுமென்றே உட்புகுத்துதல் தவறு என்றும் கூறியுள்ளார். தம்முடைய கட்டுரை, ஆய்வுநூல்கள், படைப்புகள் என அனைத்திலும் தனித்தமிழ் நடையைக் கையாண்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது.

தந்தை பெரியார்

தாம் நடத்திய இதழ்களுக்கு குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை எனத் தனித்தமிழில் பெயர் சூட்டியமை சிந்திக்கத்தக்கது. எம்மொழியிலிருந்தும் நம்மொழீக்கு ஆக்கம் தரக்கூடியதும் அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக்கொள்ளலாம். எம்மொழீத் தொடர்பிருந்தாலும் பராயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ்மொழி ஒன்றுதான் இன்றுவரை வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ்மொழி பெற்றிருக்கிறதென்று மேனாட்டு வல்லுநர்களே எடுத்துக்காட்டியுள்ளார்கள் என தனித்தமிழின் தேவையைக் குறித்து எழுதியுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன்

பள்ளிகள், கல்லூரிகள், இதழ்கள், இசை, நாடகம், மேடை முதலிய அனைத்துத் துறைகளிலும் தனித்தமிழே விளங்கிடச் செய்தல் வேண்டும் என அறிவுறுத்திப் பாடிய பாடல்களால் தனித்தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பிய பாரதிதாசன் தனித்தமிரியக்கப் பாவலாகவும் பரப்புநராகவும் திகழ்ந்துள்ளார்.

                  தாய்ப்பாலில் நஞ்செனவே

                        தமிழில்வட மொழிசேர்த்தார்

                              தவிர்தல் வேண்டும்

                  தமிழ்ப்புலவர் தனித்தமிழில்

                        நாடகங்கள படக்கதைகள்

                              எழுதவேண்டும் (தமிழியக்கம்)

தனித்தமிழ் இயக்கத் தலைவர்களான பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரைப் போற்றிப் பாடினார். தாம் நடத்திய குயில் இதழில் வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா? என்னும் கட்டுரைத் தொடரை எழுதினார். பாரதிதாசன் பாடல்களால் தமிழுணர்ச்சியும் எழுச்சியும் பெற்ற பல இளையோர் தனித்தமிழ்க் கொள்கையை ஏற்றுக்கடைப்பிடிக்கவும் செய்தனர்.

புலவர் குழந்தை

உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரான இவர் தனித்தமிழ்இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொல்காப்பியர் காலத் தமிழர், யாப்பதிகராம், தொடையதிகாரம், இராவண காவியம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

                  அரிசியிற் கலைலைக்கலப் பதுபோல் வலிந்து

                  அயல்மொழிச் சொற்களை அளவின்றிக் கலந்து

                  முரசு முழங்குதானை மூவர்முன் விழைந்து

                  முறையொடு போற்றிய முத்தமிழை நலிந்து

                  கொலைபுரி யாதிரையா – ஐயா

                  கொலைபுரி யாதிரையா (புலவர் குழந்தைப் பாடல்கள்)

என மொழிக்கலப்பு செய்வோரை வேண்டினார்.

கா. அப்பாதுரையார்

பன்மொழிப் புலவரான இவர், திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கியவர். தமிழாக்கம், வரலாற்றாய்வு, இலக்கிய ஆய்வு, மொழியாய்வு என பல துறைகளிலும் தம் திறத்தைக் காட்டியவர். தென்னாட்டுப் போர்க்களங்கள், தென்மொழி, தென்னாடு, மொழிவளர் முதலிய நூல்கள் பல படைத்துள்ளார்.

தனித்தமிழ் இயக்கம் தமிழை வளர்க்கும் இயக்கம் மட்டுமன்று. தமிழ்கடந்து தமிழினத்தையும் உலகையும் வளர்க்கும் இயக்கமும் ஆகும் என முழங்கியவர்.

அறிஞர் அண்ணாத்துரை

பலதுறைகளில் சிறப்புமிக்க எழுத்தாளராவும், புகழ்மிக்க சொற்பொழிவாளராகவும், இதழியலாளராகவும் திகழ்ந்தார் பேரறிஞர் அண்ணா.  

ஆரியத்தை இலக்கியம், எண்ணம், இசை முதலிய எல்லாத் துறைகளிலுமிருந்து விரட்டி ஒழித்தால்தான் தமிழர் தமிழராக முடியும். ஆகவே, தமிழர் இந்த ஆரிய எதிர்ப்பைக் கண்டு தளராமல் உழைக்க முன்வரவேண்டும் என அறைகூவல் விடுத்தவர்.

வடமொழி கலந்து எழுதும் சூழல்

தமிழ் நூல்கள் பலவற்றை வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு பிறகு வடமொழியிலிருந்து அவை வந்தன என்று கூறுவதே அடிகள் காலத்தில் பெருமையாகக் கருதப்பட்டது. எந்தவொரு நூலை எழுதுபவரும் தம் நூல் வடமொழியிலிருந்து எழுதப்பட்டது என்றோ, வடமொழியைக் கற்று எழுதப்பட்டது என்றோ கூறினால்தான் மக்கள் போற்றும் சூழல் இருந்தது. பேரறிஞர்கள் எனக் கருதப்படுபவர்கள் வடமொழியில்தான் நூல் எழுதுவர் என்றோ அல்லது வடமொழி கற்று அதன்வழி எதனையும் எழுதுவதாகப் பாவனை செய்பவர்களே பேரறிஞர்களாவர் என்றோ கருதப்பட்ட சூழல் இருந்தது.

நாளிதழ்களில் தமிழ்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற கிழமை, திங்கள், நாள் இதழ்கள் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்துக்கு மேல் அமிர்தவசனி, ஆனந்த போதினி, இந்து பாஷிணி, இந்து மதாபிமானி, உதயதாரகை, கலாரத்நாகரம், கிருஹலக்ஷ்மி, கிருஷிகள், குலாலமித்திரன், சக்கரவர்த்தினி, சன்மார்க்க போதினி, சீவரத்தினம், சுதேச பரிபாலனி, ஜெயபாரதி, ஜோதிடகலாநிதி, ஞானசித்தி, ஞானாமிர்தம், தமிழர்நேசன், தர்மபோதினி, தார்மீக ஹிந்து, திவ்வியார்த்த தீபிகை, தேசபந்து, தேசோபகாரி, நகரமித்திரன், நீலலோசனி, பஞ்சாமிர்தம், பிரபஞ்சமித்திரன், மாகர் மனோரஞ்சனி, யதார்த்த பாஸ்கரன், லோகோபகாரி, வர்த்தக மித்திரன், விசுடரத்தினம், வித்தியாபிமான், விவசாய தீபிகை, விவேகபோதன், விஜயபாரதி, வீரகேசரி, ஜனவிநோதினி எனப் பிறமொழிப் பெயர்களால் வெளிவந்தன. இன்று கூட தினத் தந்தி, தின மலர், தினகரன், தின பூமி, எக்ஸ்பிரஸ் போன்றன பிறமொழிச் சொற்கள் கலந்த இதழ்களாகவே வெளிவருகின்றன. அதில் இடம்பெறும் செய்திகளும் அவ்வாறே திகழ்கின்றன.

பேராசிரியர்கள் பரிதிமாற் கலைஞரும் பூர்ணலிங்கமும் சேர்ந்து கூட்டாக நடத்திய திங்கள் இதழ் ஞானபோதினி. மறைமலையடிகளின் ஞானசாகரம் (தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய பின் அறிவுக்கடல் என மாற்றப்பட்டது), தந்தை பெரியாரின் குடிஅரசு, அயோத்திதாசரின் தமிழன், திரு.வி.க.வின் தேசபக்தன், நவசக்தி  போன்றன தனித்தமிழில் அமைந்திருந்தன. இவ்வாறு தனித்தமிழ் கொள்கையாளர்கள் நடத்திய இதழ்கள் தமிழ்ப்பெயர்கள் தாங்கி வெளிவந்தன. இன்றைக்கு பல்வேறு நிறுவனங்கள் தங்களின் இதழ்களுக்குத் தனித்தமிழில் பெயர் வைக்க முனைந்துள்ளனர். அவற்றுள், மணற்கேணி, ஓலைச்சுவடி, காலச்சுவடு, அரிமா நோக்கு, வளன் ஆயம், செம்மொழித் தமிழ், நவீனத் தமிழாய்வு போன்ற பல்வேறு இதழ்கள் குறிப்பிடத்தக்கன.

அழைப்பிதழ்களில் தமிழ்

மக்கள் தங்கள் வாழ்க்கையில் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர் இன்றும் அதன் முக்கியத்துவம் குறைவில்லாமல் இருந்துவருகிறது. விழாக்களில் அழைப்பிதழ்களின் பங்கு இன்றியமையாததாகிறது. ஆனால் பல்வேறு அழைப்பிதழ்களிலும் தலைப்பும், செய்தியிலுள்ள சொற்களும் பிறமொழிச் சொற்களாகவே அமைந்திருக்கின்றன. அவற்றுள், விவாஹ சுபமுகூர்த்தம், நிச்சியதார்த்தம், கிருஹப் பிரவேசகம், சீமந்த முகூர்த்தம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், நமஸ்காரம், சூரியோதயம், வருஷம், தினம், நக்ஷத்திரம், லக்கினம், சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, தம்பதிகள், ஆசீர்வதித்தல் போன்ற சொற்கள் ஏராளமாக எடுத்தாளப்பட்டுள்ளன.

இவற்றை மாற்றித் தனித்தமிழில் இச்சொற்களை மன்றல் விழா (திருமண விழா), புதுமனை புகுவிழா, நாள், நேரம், ஆண்டு, திருநிறை செல்வன், செல்வி என்று சொற்களில் மாற்றங்கள் செய்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடைத்தெருக்களில் தமிழ்

கடைத்தெருக்களின் விளம்பரப் பலகைகளில் பிறமொழிச் சொற்கள் காணப்பட்டனவே தவிர தமிழ் சிறப்படையவில்லை. இந்நிலை கண்டு நொந்த பாரதிதாசன் வணிகர் தம் முகவரி வரைகின்ற பலகையில் ஆங்கிலத்தில் எழுதக்கூடாதென்றும், மாணுயர்ந்த செந்தமிழால் வரைதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பவன், மண்டல் முதலிய சொற்கள் தமிழகத்தில் பயிலக்கூடாது. அறிவிப்புப் பலகைகள் அருந்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட வேண்டும். அச்சொற்களும் குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையவேண்டுமென்று பாரதிதாசன் அறிவுறுத்தினார்.

அகராதியில் தமிழ்

சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியிலும் தமிழ்ச் சொற்கள் இடம்பெறவில்லை. அடிப்படையும், முதன்மையுமான தமிழ்ச்சொற்கள் வடசொற்களின் திரிபாகக் காட்டப்பட்டன. வேண்டாத அயற்சொற்களும் இந்திச் சொற்களும் இடம்பெற்றன. அந்த அகராதியைப் பார்த்தால் தமிழ் வடமொழியின் கிளை என்ற முடிவுக்குத்தான் வரஇயலும் என்பர் பாவாணர்.

இங்ஙனம் அனைத்துத் துறைகளிலும் மொழிக்கலப்பால் தமிழின் நிலை தாழ்ந்தது கண்டு வருந்திய திரு.வி.க. இப்பொழுது நமது தாய்மொழியாகிய தமிழ்மொழி எந்நிலையுற்றிருக்கிறது? தமிழ்த்தாய் யாண்டு உறைகிறாள்? அரசாங்கத்தில் வீற்றிருக்கிறாளா? மன்றங்களில் வசிக்கிறாளா? சட்டசபைகளில் வாழ்கிறாளா? கல்லூரிகளெனப்படும் நிலையங்களிலாதல் அவளைப் பார்க்கலாமா? உரிமைக்கு உழைப்பதாகச் சொல்லப்படும் அரசியல் கழகங்களிலாதல் அவளைக் காணலாமா? தமிழ்ப் பத்திரிக்கைகளிலாதல் அவளுக்கு இடம் உண்டா? பல பத்திரிக்கைகள் தமிழ்த்தாயின் சிகையை, கழுத்தை, இடுப்பைக் கொய்யும் இறுவாளாகவும், அறுக்கும் கொடுவாளாகவும் உடைக்கும் தண்டமாகவும் அல்லவோ உலவுகின்றன? சுருங்கக் கூறின் தமிழ் மக்கள் தாய்மொழியைக் கொலை செய்வதில் பேரும் புகழும் பெற்றவர்களளென்று கூறலாம்.

                  அசைபோடுங் கல்லூரிப் பயிற்சி தன்னில்

                  அங்காடி நிறுவனத்தில் ஆலயத்தில்

திசைகாட்டும் பலகைகளில் நீதிமன்றில்

திருமணத்தில் இழவுவீட்டில் மேடைப்பேச்சில்

இசையரங்கில் வனொலியில் நாடகத்தில்

எங்கெங்கும் தாய்மொழிக்குத் துரோகக் கூட்டம்

கசப்பான உண்மை இதை மாற்றாவிட்டால்

களிப்பேது முன்னேற்றம் காண்பதேது

என்னும் கு.சா. கிருட்டிணமூர்த்தியின் கருத்து நோக்கத்தக்கது (கதையல்ல வரலாறு, செங்கோல் வெள்ளிவிழா மலர்)

தமிழ்மொழி வளர்க்க இன்றைய சூழல்

தமிழை வளர்க்க இன்று பெரும்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

v  ஒவ்வொரு துறையிலும் தமிழின் சிறப்பினை எடுத்துரைக்க அரசால் தமிழ் வளர்ச்சித்துறை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

v  தமிழ்ச்சங்கங்கள் மூலமும், உலகத் தமிழ் மன்றத்தின் வழியாகவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சிகள் மேலோங்குகின்றன.

v  தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. செந்தமிழைச் செழுந்தமிழாக்கி அதன் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடவும், அதனை மொழிபெயர்த்து வெளியிடவும் வழிவகை செய்யப்படுகிறது.

v  இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழியினை மேம்படுத்த செயலிகள் வழியும், கையாளப்படும் தமிழ்ச்சொற்களைச் சேர்த்து வெளியிட சொற்குவைத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

v  தமிழைத் திரைத்துறையில் இணைக்க வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது. பாடல்களும் தமிழ்நடையில் இருக்க ஊக்குவிக்கப்படுகிறது.

v  தனித்தமிழில் பேசுவோர் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

v  அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களின் பெயர்களும், தமிழகத்தின் பல்வேறு தெருக்களின் பெயர்களும், சாலைகளின் பெயர்களும் தமிழ்மொழியிலேயே இருந்திடச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

v  அரசில் பல்வேறு கொள்கைக் குறிப்புகள் தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் வெளியிடப்படுகிறது.

v  பள்ளிகளில் கட்டாயத் தமிழ் வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டும், தமிழ்வழியில் பயின்றோர்க்கு அரசுப்பணியில் முன்னுரிமை என்றும், அரசுப்பணித் தேர்வுகளில் தமிழ்மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படுகிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நற்றிணை 148 _ பாலைத்திணை

 
 
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது

- கள்ளம்பாளனார்

v  தோழி! உன்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும், மெல்லிய இனிய சொல்லால் "நான் செல்லும் வழியில் உன்னால் வர இயலாது" எனப் பலவாறாகக் கூறியும், தலைவர் பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

v  இந்நாளில், நெடிய குளத்தின் நீரில்லாத நீண்ட வழியிலே, சிவந்த அடியினையுடைய மரா மரத்தின் அருகில் மறைந்து நின்று, வளைந்த வில்லையுடைய கள்வர்கள் அதிகம் இருப்பர். 

v  அவ்வாறான நிலையிலும் அச்சங்கொள்ளாது,

v  மலையில் உள்ள குகைக்குள், பெரிய நகங்களை உடைய பெண்புலி, குட்டிகளை ஈன்றதனால் ஆகிய வேதனையும் (வலியும்), பசியும் தீரும்படி மிகுந்த கோபத்துடன் சிவந்த கண்ணையுடைய புலியானது, பெரிய கொம்பினையுடைய யானையின் புள்ளிகள் உடைய முகத்திற்கு நேராகச் சென்று பாயும்.

v  அவ்வாறான ஆபத்து மிகுந்த வழியின்கண்ணே தலைவர் சென்றிருக்கிறார்.

v  அவர் செல்லுவதனை அறிந்த நான் சிறிதும் வருத்தப்படவில்லை. நீயும் வருந்தாதே;

v  அவர் செல்லும் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக!

நற்றிணை 70 _ மருதத்திணை

 

காமம் மிக்க கழிபடர்கிளவி

- வெள்ளிவீதியார்

v  நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற தூய வெண்ணிறம் கொண்ட சிறகினையுடைய சிறிய குருகே!

v  தலைவனின் ஊரில் உள்ள நீர், என்னுடைய ஊரினுள் வந்து பாய்கின்ற வயற்பரப்புடைய நல்ல ஊரினைச் சேர்ந்த என் தலைவரிடம் சென்று,

v  என்னுடைய அணிகலன்கள் கழண்டு விழும் துன்பத்தை இதுவரை சொல்லாமல் இருக்கிறாயே!

v  நீ எம் ஊரினை அடைந்து, அங்குள்ள குளத்தில் உள்ள துறையிலே புகுந்து தேடிச் சினையுள்ள கெளிற்று மீனைத் தின்கின்றாய்.

v  அதன்பின், அவருடைய (தலைவர்) ஊருக்குச் செல்வாயாக; எம் ஊரில் வந்து உண்ட நன்றி மறவாமல் அவரிடம் என் நிலைமையைக் கூறுவாயோ? அல்லது மறந்திடுவாயோ? ஒன்றினை ஆராய்ந்து கூறு....

நற்றிணை 21 _ முல்லைத்திணை

 

வினைமுற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது

- மருதன் இளநாகனார்

v  பாகனே ! விரைந்து சென்றதால் வருந்திய குதிரைகளை உடைய வீரர்கள், இடையில் தொங்கவிடப்பட்ட வாளின் கச்சையின் பிணிப்பைத் தளர்த்தி, ஆங்காங்குத் தங்கித் தாங்கள் விரும்பியவாறு அமர்ந்து, மெல்ல நடந்து வருவாராக;

v  உருக்கப்பெற்ற நறுமணம் மிக்க நெய்யில் பாலைச் சிதறினாற் போன்ற குரலையுடைய அழகிய சிறுசிறு புள்ளிகளமைந்த காண்பவர்கள் விரும்பும் தன்மை கொண்ட கானங்கோழி; 

v  மழை நின்றபின், நீர் வடிந்துகொண்டிருக்கிற அகன்ற காட்டிலே, ஈரமணலை நன்றாகப் பறித்துத் தம் இரையாகிய நாங்கூழ்ப் புழுவைக் கவர்ந்து அதனைக் கொன்று, தன் துணையாகிய பெண்கோழிக்கு ஊட்ட வேண்டி, அப்பெடையை நோக்கி அழைக்கிறது. அத்தகைய காட்சியைப் பார்.

v  எனவே, நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுவரை தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!

v  {தலைவி எனக்காகக் காத்திருப்பாள்}

நற்றிணை 19 _ நெய்தல் திணை

 

புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

- நக்கண்ணையார்

v  இறால் மீனின் புறம் போன்ற தாழையின் வேர்களும், பெரிய சுறாமீனின் பற்களைப் போன்ற முட்களுடைய இலைகளையும், பெரிய யானையின் கொம்பு போன்ற அரும்பும், நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போன்ற தாழம்பூவும் அமைந்துள்ள இடத்தினையுடையதும்,

v  விழா நடைபெறும் இடமெல்லாம் மலரின் நறுமணத்தைப் பரப்பி நிற்கும்  நீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!

v  மிகுந்த மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன்  உன் ஊருக்குச் செல்லும் பொருட்டு  ஓட்டுவதனால், நீயும் புறப்படத் தயாராக இருக்கிறாய்.

v  இன்னும் சில நாட்களில் வருவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறாய். அந்த சிலநாளளவும் இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக!

v  {விரைவில் வரைவு (திருமணம்) செய்து கூட்டிச்செல் என்று கூறுவதாக அமைந்துள்ளது}

நற்றிணை 1 _ குறிஞ்சித் திணை

 

தலைவனின் பிரிவைத் தலைவிக்குத் தோழி உணர்த்துகையில் தலைவியின் கூற்றாக அமைந்தது

- கபிலர்

v  என் தலைவர், தான் சொன்னபடிச் செயலாற்றி நிற்பவர். திரும்பி வரக் காலம் தாழ்த்தினாலும் என் தலைவர் இனியவர். என்றும் என்னுடைய தோள்களைப் பிரிந்து அறியாதவர்.

v  தாமரையில் எடுத்த தேனைச் சந்தனமரத் தேன்கூட்டில் சேர்த்து வைத்திருக்கும் தேன் போல உயர்ந்தது அவருடனான நட்பு. அவருடைய அந்த நட்பு சான்றோர்களின் நட்பு போன்றது.

v  நீர் இல்லாமல் உலகம் இயங்காது. அதுபோல அவர் இல்லாமல் நம்மால் வாழமுடியாது என்பது தலைவருக்குத் தெரியும். அப்படிப்பட்ட நம்மைக் காத்து வந்திருக்கிறார்.

v  அப்படிப்பட்ட நம் தலைவர், பிரிவினால் நெற்றி பசந்து மெலியும் என்னைவிட்டுச் செல்வாரோ?

v  அப்படிச் செய்வதற்கு அவருக்குத் தெரியாது.


மகாகவி பாரதியின் குயில் பாட்டு: குயிலின் முந்தைய பிறப்பு கதை




சிந்துக்குத் தந்தை, நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா என்றெல்லாம் பலவாறாகப் பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர் சுப்பிரமணிய பாரதியார். 
எட்டையபுரத்தில் 1882 டிசம்பர் 11ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
சிறுவயதிலிருந்தே கவிகளைப் புனையும் திறம்பெற்ற சுப்பிரமணியம் எட்டையபுர அரண்மனையில் பணியாற்றினார். இவரின் தனித்திறமையைக் கண்ட எட்டையபுர மன்னர் இவருக்குப் பாரதி என்ற பட்டம் அளித்தார். அப்பெயரே இன்று நிலைத்துவிட்டது. 

பாரதி கவிபுனைவதில் மட்டுமல்ல, பல்துறை சார்ந்த அறிவும் அவரிடம் மிகுந்திருந்தது. கட்டுரைகள், கதைகள், காவியங்கள் போன்றனவும் இயற்றியுள்ளார். 
சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இந்திய விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டவர். அதோடு சமூக விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும் இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 
ஆங்கிலேய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்துப் பத்திரிக்கைகளில் எழுதிவந்தவர். அதே நேரத்தில் இலக்கியத்தையும் படைத்தளித்தவர். 

பல்வேறு மொழிகளை அறிந்தவர். அதனால்தான், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார். 
இவரின் ஆங்கில நடையைப் பார்த்து ஆங்கிலேயர்களே வியந்தனர் என்பது செய்தி. ஆங்கிலத்தில் கவிஞர் ஷெல்லியின் கவிதைகளை மிகவும் நேசித்தவர். தன்னை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டவர். 
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களைப் படைத்தளித்தவர்.

பெண்களின் துயர்நீங்க அவர்கள் சமூகத்தில் உயர அவர்களுக்குக் கல்வி அறிவு வேண்டும் என்று குரல்கொடுத்தார். பெண்களுக்குச் சமூகத்தில் சம மதிப்பு அளிக்கவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டியவர். 
இறுதிகாலத்தில் தாம் நினைத்தவை எதுவும் நடைபெறாமல் போக மிகவும் சோர்வடைந்தார். 
1921 செப்டம்பர் 11ஆம் நாள் தம் உலகவாழ்வை முடித்துக்கொண்டார். 
(2021 ஆம் ஆண்டு அவர் மறைவின் நூறாண்டு)  


 குயிலின் முந்தைய பிறப்பு: குயில் கவிஞனை நோக்கிக் கூறுகிறது, "என் உயிரே, என்னை விட்டுப் போவதன் முன்னால் நான் சொல்லுவதனை அருள்கூர்ந்து கேட்க வேண்டும்”.

ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஆழ்ந்த சிந்தனையோடு நான் அமர்ந்திருந்தேன். அவ்வேளையில் அங்கு ஓர் முனிவர் வந்தார். பெரியவர் என்றெண்ணி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன். அவர் என்னை வாழ்த்தி ஆசி கூறினார். அதன்பின் என் உள்ளத்திலே விடைகிடைக்காமல் இருந்த ஒரு வினாவுக்கு அவரிடம் விடை தேடினேன்.

"வேதமுனிவரே! உலகினில் மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மனிதரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்" என்று வணங்கிக் கேட்டேன்.

முனிவர் குயிலின் முற்பிறப்புக் கதையைக் கூறுதல்

"குயிலே! கேள். சேர வளநாட்டின் தென்புறத்தே ஒரு மலை உள்ளது. அம்மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாகப் பிறந்திருந்தாய். உன் பெயர் "சின்னக்குயிலி". உன்னுடைய அழகு, ஒளிவீசும் முகம் இவற்றுக்கு இணையாக தமிழ்நாட்டில் யாருமே இல்லை. அப்போது, உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் இருந்தான். உன் அழகைக் கண்டு அவன் உன்னை திருமணம் செய்துகொள்ள எண்ணி உன் நினைவாகவே சுற்றித்திரிந்தான்.

மாடனின் காதலும் வீரமுருகனின் முடிவும்

அவனைக் வற்புறுத்தல்கள் தாங்காமல் அவனை நீ திருமணம் செய்துகொள்வதாய் உறுதியளித்தாய். இந்நிலையில் உன்னுடைய அழகின் புகழ் மற்ற நாடுகளிலெல்லாம் பரவியது. தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க விரும்பி, உன் தந்தையிடம் "உன் பெண்ணை என் மகனுக்குத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றான். வீரமுருகனும் அதற்கு அனுமதியளித்தான். பனிரெண்டு நாட்களிலே உன்னை திருமணம் செய்துகொள்வதாய் அவர்கள் உறுதி செய்துவிட்டார்கள்.

மாடனின் கோபம் குயிலியின் சமரசமும்

இச்செய்தி அறிந்த மாடன் கோபம் கொண்டான். அவன் உன்னிடம் வந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினான். நீ அவனிடம் சொன்னாய், "மாடா! உன்னுடைய கோபத்தைக் குறை. நெட்டைக் குரங்கனுக்கு நான் மனைவியாகச் சென்றாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து சண்டைகள் உருவாக்கி, இங்கே வந்திடுவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிடுவேன். அடுத்த நான்கு மாதத்தில் உன்னை நான் திருமணம் செய்துகொள்வேன். பேச்சு தவறமாட்டேன். என்னை நம்பு" என்று கூறினாய்.

தோழிகளுடன் குயிலி – சேர இளவரசனின் காதல்

ஒருநாள் மாலை, மின்னல் ஒன்றோடொன்று இணைந்து விளையாடுவதைப் போன்று நீயும் உன் தோழியரும் காட்டிலே விளையாடிக்கொண்டிருந்தீர்கள். அப்போது சேரமன்னனின் மகன் வேட்டையாடக் காட்டிற்கு வந்தான். இடையில் வழிமாறி தன்னுடைய துணைவர்களை எல்லாம் பிரிந்து, நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த இளவரசன் உன் மீது காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது காதல் கொண்டாய். தோழிகள் உன்னை விட்டுச் சென்றனர். மனத்தினுள் காதல் இருக்க அவனிடம் வெறுப்பைக் காட்டுவதுபோல் நடித்தாய்.

உன் அரண்மனையில் உள்ள பெண்கள் கல்வியிலும், சிற்பத்திலும், இசையிலும் சிறந்தவர்களாக இருக்கும்போது என்னை விரும்புவது ஏன்? உனக்காகப் பணிவிடை புரிய ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும்போது அவர்களுடன் நானும் ஒருவளாக இருக்க விரும்பவில்லை. எனவே, ஆசையை ஒழித்து இவ்விடத்திலிருந்து சென்றுவிடு என்று கூறினாய். அவனோ, காதல் மிகுதியினால் உன்னைக் கட்டியணைத்தான். உன்னைத் தவிர வேறுபெண்ணை நான் விரும்பமாட்டேன் என்று உன் வலக்கையில் அடித்துச் சத்தியம் செய்தான். உடனே நீயும் அவனை விரும்பினாய். இருவரும் இன்ப சுகம் அடைந்திருந்தீர்கள்.

நெட்டைக் குரங்கன் வருகையும் மாடனின் கோபமும்

அப்போது, ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்துசேர்ந்தான். நீ, காட்டிற்கு விளையாடச் சென்றிருப்பது அறிந்து உன்னைக் காண ஓடிவந்தான். அங்கு சேர இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான். அவன் உள்ளம் தீப்பற்றி எரிந்தது. நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான்.

கண்களில் கனல் தெறிக்கவந்த மாடன், குயிலி அயலான் ஒருவனுடன் இருப்பதைக் காண்கிறான். நெட்டைக்குரங்கன் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. மாடனை நெட்டைக்குரங்கனும் கவனிக்கவில்லை. குயிலியோடு நிற்பவன் நெட்டைக்குரங்கன் என்று மாடன் நினைத்தான். குரங்கனோ இவள் காட்டில் எவனிடமோ காதல் அமுதம் அருந்துகிறாள் என்று நினைத்தான்.

எதிர்பார்த்த முத்தம் - எதிர்பாராத கோபம்

இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர். இளவரசன் மீது இருவர் வீசிய வாட்களும் பாய்ந்தன. உடனே, இளவரசன், தன் வாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான். அடுத்த கணமே அவனும் சாய்ந்தான். குருதி கொப்புளிக்க விழுந்து கிடந்த இளவரசன் உடலைத் தன் மடிமீது வைத்து சின்னக்குயிலி கண்ணீர் வடித்தாள்.

இளவரசனின் இறுதியுரை

"வஞ்சியே, நீ அழாதே. பிறப்பும் இறப்பும் இவ்வுலகில் புதுமை அன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு அன்பு கொள்வேன். உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்" என்று புன்னகை பூக்கச் சொல்லி உயிர் துறந்தான். இப்பிறப்பில் நீ குயிலாய் பிறந்திருக்கிறாய் என்று அந்த முனிவர் குயிலின் வரலாற்றைக் கூறி முடித்தார்.

இப்பிறப்பில் பிறந்த இளவரசன் – மாடன் – குரங்கன் - குயிலி

அந்த முனிவர் மேலும் பேசினார். "உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப்பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். அவன் உன்மேல் மீண்டும் காதல் கொள்வான்" என்றார். அது கேட்டு நான் வியப்படைந்தேன். "ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தாலும், எவ்வாறு திருமணம் நடக்கும்?" என்றேன்.

"இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகவே பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டுவிட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். இது உனக்குத் தெரியவில்லையா?" என்றார் முனிவர்.

இணைக்க மறுக்கும் இணையர்கள்

"ஐயோ! பேய்கள் என் பிறப்பையும் மறக்கச் செய்து துன்புறுத்தி வருமெனில், யான் மீண்டும் என் மன்னவனைக் கண்டால் என் செய்வேன்? இப்பேய்கள் அவருக்குத் தீங்கிழைத்தால் நான் எப்படித் தடுப்பேன்? தேவரே! இதற்கு வேறு வழி இல்லையா?" என்று நான் கேட்டேன். மாமுனிவரும், "பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதனால் உன்மேல் சந்தேகம் கொள்வான். கோபத்தால் உன்னை விட்டுவிட நினைப்பான். அதன்பின் நடப்பதை நீயே அறிந்துகொள்வாய். எனக்கு நேரம் ஆகிவிட்டது" என்று சொல்லி அவரும் காற்றிலே மறைந்து போனார்.

கதையை முடித்தது கவிஞனிடம்

இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பில் நடந்தவற்றை நீர் அறிவீர்! "ஆரியரே! காதலருள்புரிவீர் காதலில்லை என்றிடிலோ சாதல் அருளித் உமது கையால் கொன்றிடுவீர்!" என்று அழுகின்ற கண்களோடு குயில் கூறியது. எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்ட பாவலனின் உள்ளம் அது கேட்டு நெருப்பில் இட்ட அரக்காய் உருகியது. இன்பவெறி கொண்டு என் கைகளால் அதனை ஏந்தி, இருவிழியால் நோக்கினேன். ஆராத அன்போடு அதனை முத்தமிட்டேன்.

குயில் குயிலியானாள்

என்ன விந்தை! அடுத்த வினாடி குயிலைக் காணவில்லை. அவ்விடத்தில் பெண் ஒருத்தி நின்றாள். அவள் மிகுந்த பேரழகு கொண்டு நின்றாள். அவளை முத்தமிட்டேன். அந்த மயக்கத்தில் சித்தம் மயங்கினேன். தன்னையும் மறந்து கிடந்தேன்.

எல்லாம் கனவு

பின்னர் சட்டென கண்விழித்தேன். "விழி திறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச்சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம் ஒத்திருக்க நான் வீட்டில் உள்ளோம் எனவுணர்ந்தேன்".

***********

பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்


 முன்னுரை

பத்துப் பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருநர் ஆற்றுப்படை. கரிகாற் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவன், எதிரே வந்த வேறொரு பொருநனைப் பார்த்து சோழமன்னன் கரிகால் வளவனைச் சென்று சந்தித்துப் பரிசுகளைப் பெற்று வருவாய் என்று வழிப்படுத்தியது.

ஆற்றுப்படையின் இலக்கணத்தை,

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெருநர்க் கறிவுறீ இச்

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”

என்று தொல்காப்பியம் சொல்கிறது.

தான் பெற்ற பெரிய செல்வத்தைப் பெறாமல் தவிக்கும் எதிர் வந்தவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களையும் வள்ளலிடம் சென்று பயன் பெறும்படிச் சொன்ன முறையும் என்பது பொருள்.

பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். பொருநர் ஆற்றுப்படையில் வருபவன் தடாரி கொட்டுபவன். அவனுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் தருபவரைத் தேடிச் செல்பவன். இந்த ஆற்றுப்படையில் முதலில் யாழின் வருணனையும், பிறகு விறலியின் வருணனையும், பொருநனுடைய இயல்பையும் கூறுகிறது. பிறகு, “நானும் வறுமையால் துன்புற்றவன்தான், கரிகால் சோழனிடம் சென்று இந்தப் பரிசுகளையெல்லாம் பெற்றேன்” என்று சொல்கிறான். அதன்பின், கரிகாற் பெருவளவன் பெருமை, கொடைச்சிறப்பு, வெண்ணிப்போர் வெற்றி, சோழநாட்டின் வளம், காவிரியின் வளம் போன்றன குறிப்பிடப்படுகின்றன.

 

பொருணனை விளித்தல்

முதலில் எதிர்வரும் பொருநனைப் பரிசு பெற்று வரும் பொருநன் விளிக்கிறான். பெரிய ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் சென்று தன் வாத்தியத்தை வாசித்து உணவும் பரிசும் பெற்றவன் எதிர் வருபவன். “தடாரி வாசிக்கும் முறைகளை எல்லாம் அறிந்த பொருநனே” என்று அவனை அழைக்கிறான்.

 யாழின் இயல்பு      

    யாழின் குடம் போன்ற அமைப்பில் நடுவில் மேடாகவும் இரு பக்கமும் பள்ளமாகவும் இருக்கிறது. அதைப் பார்த்தால் மானின் காலடி அழுத்திய இடம் எப்படி இடையில் மேடும் இரு பக்கமும் பள்ளமுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.

·       விளக்கினுடைய எரிகின்ற நிறத்தைப் போன்றது யாழை மூடிய தோலால் விசிக்கப்பட்ட போர்வை இருக்கிறது.

·       யாழின் மேற்போர்வையைத் தைத்துப் போட்டிருக்கிறார்கள். இன்னும் நன்றாகத் தெரியாத இளஞ்சூலையுடைய சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லியதாக மயிர் தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக்கிறது.

·       குடத்தைத் தைப்பதற்கு ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண்களைப் போல இருக்கின்றன.

அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி.

·       யாழின் கொம்பு வளைந்திருக்கிறது. அது எட்டுநாள் ஆன பிறையைப்போல தோற்றம் கொண்டுள்ளது. அதன் இறுதிப்பகுதி நாக்கு இல்லாமல் அமைந்த பாம்பினைப் தோற்றத்தை அளிக்கிறது.

·       யாழில் வாரைக் கட்டியிருக்கிறார்கள். அது கரிய நிறத்தை உடைய பெண்ணின் முன் கையில் அணிந்த வளையல்களைப் போல உள்ளன.

·       நரம்புகளே ஒன்றொடொன்று நெருக்கமாக இருக்கிறது. விரலால் சுண்டி அசைக்கும் நரம்புகளை உடைய யாழ் அது.

·       திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய்தாற் போன்ற அழகையுடையதாக உள்ளது.

·       அந்த யாழ் பாலையாழ் என்னும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில் ஆறலைக் கள்வராகிய வழிப்பறிக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால் அதைக் கேட்டுத் தம்மை மறந்து நிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள கொலைகருவிகள் தாமே நழுவிவிடும். அன்புக்கு எதிரான பகைமையை அவர்களிடமிருந்து நீக்கிவிடும்.

அத்தகைய இனிய யாழ் அது. அந்தப் பாலையாழை வழிச்செல்பவர்களோடு செல்லும் விறலி வாசிக்கிறாள். நரம்புகளைக் கூடத் தழுவியும் உருவியும் தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும் பாடுகிறர்கள்.

பாடினியின் நிலை

o   பாடினியின் கூந்தல் ஆற்றில் படிந்திருக்கும் கருமணலைப் போலக் கருமையாக, அலையலையாக இருக்கிறது

o   அவள் அழகிய நெற்றியோ பிறை போலத் தோற்றம் அளிக்கிறது. அவளுடைய புருவம், கொலை செய்வதற்காக வளைந்திருக்கும் வில்லைப் போல உள்ளது.

o   அவளுடைய கண்கள் மழை போன்ற குளிர்ச்சியைப் பெற்றனவாக இருக்கின்றன.

o   அவளுடைய வாய் பூவின் இதழைப் போல அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அந்த வாயிலிருந்து வரும் சொல் இனிமையாக இருக்கிறது.

o   அவள் பற்கள் முத்துக்களை வரிசையாக வைத்தது போன்ற காட்சியை அளிக்கின்றன.

o   மென்மையான மயிருடைய காதுகளில் குழைகளை அணிந்திருக்கிறாள். அழகுபெற்ற குழைகள் ஊசலாடுகின்றன.

o   அவள் நாணமுடையவள். அவள் தன் கழுத்தைக் கீழே சாய்த்திருக்கிறாள்.

o   அவளுடைய பெரிய தோள்கள் மூங்கிலைப் போல இருக்கின்றன.

o   அவளுடைய முன்கை மெல்லிய, மயிர்களை உடையதாகக் காட்சி அளிக்கிறது.

o   அவளுடைய விரல்கள் மலையின் மேலே வளர்ந்திருக்கும் காந்தளைப் போன்றவை.

o   அவள் விரலில் உள்ள நகங்கள் கிளியின் மூக்கைப் போல ஒளி விடுகின்றன.

o   அவளுடைய மார்பு இளமையும் அழகும் பொருந்தியவை.

o   அவளுடைய கொப்பூழ் நீரிலே உள்ள சுழியைப் போல் விளங்குகிறது.

o   அவளுடைய இடை உண்டோ இல்லையோ என்று உணர முடியாமல் உள்ளது.

o   அல்குலில் மணிகோக்கப்பட்ட ஆரத்தை அணிந்திருக்கிறாள்.

o   அவளுடைய தொடைகள் பெண் யானையின் பெரிய கையைப் போல உள்ளன.

o   அவளுடைய அடி சிறியதாக இருக்கிறது. நாயின் நாவினைப் போன்று மென்மையான பாதம் உடையவள்.

o   பெண் மயிலின் உருவத்தைப் போன்ற வடிவமும் பெருமையும் தகுதியையும் உடையவளாக விளங்கினாள் அந்த விறலி.

கூட்டத்தோடு வந்த அவர்கள் ஓரிடத்தில் இளைப்பாறினர். அந்த இடம் ஆண் யானைகள் நடமாடும் வழிகளையுடைய காடு. அந்த இடம் பாலை நிலம் என்பதால், அங்குள்ள மரா மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து மொட்டையாக நிற்கின்றன. நிழல் அடர்ந்து இல்லாமல் வலையை மேலே கட்டினாற் போன்று காட்சிதருகிறது. மரக்கிளைகளின் இடையிடையே கதிரவன் வந்து வெப்பம் அதிகரிக்கிறது. அங்கே தங்கினவர்கள் காட்டிலே உறையும் கடவுளைப் பாடித் தம் கடமையை முடிக்கிறார்கள்.

பரிசில் பெற்றவன் பெறாதவனிடம் உரைத்தல்

பெருமைமிக்க செல்வத்தையும், பெரும்புகழையும், வலிமையான முயற்சிகளையும் உடைய வெற்றி முரசுகள் முழங்கும் படைகளை உடையவர்களாகிய சேர சோழ பாண்டியர் மன்னர்கள் ஒருங்கே தங்கியிருந்த தோற்றத்தைப் போல, பாடலைப் பாடித் தனக்கு வேண்டியவைகளை உடைத்தாக்கிக் கொள்ளும் கூத்தர்க்குத் தலைவனே! எங்கே போவது என்று தெரியாமலும், வழிமாறிச் சென்றுவிடாமலும் நான் வரும் வழியின் எதிரில் பட்டாயே; இது நீ செய்த தவத்தின் பயன்தான். நான் சொல்வதை விரும்பிக் கேள்!

பசியாலே வருந்துகின்ற உன்னுடைய உறவினர்களுடன், பலகாலம் உங்களை வருத்தும் பசியானது நீங்க வேண்டுமானால் நான் சொல்லும்படிச் செய். “ஏழு சுவரங்களையுடைய பாடல்களைப் பாடும் உரிமை உடையவனே, சிறிதும் தாமதியாமல் எழுவாயாக”

பரிசுபெற்றோன் தன் நிலை கூறுதல்

நானும் உன்னைப் போலத்தான் இருந்தேன். எங்கே பழுத்தமரம் உள்ளது என்று தேடும் பறவை போல அலைந்தேன். நான் அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றபோது, என்னைப் போன்ற வறியவர்கள் பலர் இருந்தனர். அவ்விடம் பெரிய மதிலையுடையதாக இருந்தது. அவனுடைய அரண்மனை வாயில் அலங்காரம் பொருந்தியது. மிகப் பெரியது. அவனிடம் இரவலராக (பரிசுபெறுவோர்) வருகிறவர்களுக்கு எப்போதும் வாயில் (மதில் கதவு) திறந்தே இருக்கும். அங்கே நான் போகும்போது யாரிடத்திலும், “உள்ளே போகலாமா?” என அனுமதி கேட்கவில்லை.

இளைத்த என் உடம்பிற்கு இங்கே நலம் கிடைக்கும் என்று எண்ணிய போதே என் இளைப்புத் துன்பம் தீர்ந்து விட்டது. என் கையில் வைத்திருந்த தடாரியை அடித்தேன். அதில் பதிந்த என் கைத்தடம், படம் விரித்த பாம்புபோல் வடுபட்டுக் கிடந்தது. அப்போது நள்ளிருள் போய் விடிந்திருந்தது. விடிவெள்ளி முளைத்திருந்தது. அப்போது இரட்டைத் தாளத்திற்கும் பொருந்த ஒரு பாட்டினை நான் பாடினேன்.

பாடுவதற்கு முன்பே, என்னோடு பழகிய நண்பரைப் போல அவன் வந்தான்; அன்பாகப் பேசினான்; என்னை உட்காரச் செய்தான்; தன் பார்வையில் படும் படியாக அருகில் என்னை அமரச்செய்தான். அவன் பார்த்த பார்வை என்னைப் பருகுவதுபோலக் இருந்தது. அவனுடைய பார்வை என்னை உருக்கிவிட்டது. அதனால் என் எலும்பெல்லாம் குளிர்ச்சி ஆயின.

அதன்பின், நான் உடுத்தியிருந்த கந்தை ஆடையை முற்றும் நீக்கினான். அந்த கந்தை, ஈரும் பேனும் பிடித்ததாகவும், வியர்வையில் நனைந்ததாகவும் இருந்தது. வேறு நூலில் அங்கங்கே தைத்திருந்தேன். அதை நீக்கிய பிறகு எனக்கு வேறு ஆடை அணிவித்தான். எனக்குப் புதிய ஆடையை வழங்கினான். நூலில் நெய்யப்பட்ட ஆடை நெருக்கி நெய்தமையால் ஓரிழைக்கும் மற்றோரிழைக்கும் இடையே பார்வை செல்லாது. மிகவும் நுண்மையான பூவேலை செய்த ஆடையாக இருந்தது. பாம்பின் உரியைப் போல மெல்லிதாகவும் இருந்தது.

அதன்பின் அந்த மாடத்தில் பலவகை அணிகலன்களை அணிந்த பெண்கள் மயங்கச்செய்யும் கள்ளை, பொற்கலங்களில் நிறைய ஊற்றித் தந்தார்கள். அவர்கள் பலமுறை தரத்தர வழிநடந்த வருத்தம் போகும்படியாக நிறைய குடித்து, இதுநாள்வரை இத்தகைய கள்ளைக் குடிக்கவில்லையே என்று மனத்தில் இருந்த வருத்தம் போய்விட்டது.

பிறகு அவனுடைய அரண்மனையில் ஓரிடத்தில் தங்கினேன். தவம் புரிகிறவர்கள் மனத்தை ஒருமைப்படுத்திக் கடவுள் தியானத்தில் ஈடுபட்டால் இந்த உடம்பு இறப்பதற்கு முன்னே தவத்தின் பயனாகிய பேரின்பத்தை இந்த உலகத்திலேயே பெறுவார்கள். நான் பெற்ற இன்பம் அவர்கள் பெற்ற பேரின்பத்தைப் போல இருந்தது. அங்கே சுகமாகப் படுத்து உறங்கிப் பின் எழுந்தேன். கள் உண்டதால் ஆன உடம்பு நடுக்கம் அல்லது வேறு மனக்கவலையின்றி எழுந்தேன்.

நான் அவனைக் காண்பதற்கு முன்பு மாலை நேரத்தில் என்னிடத்தில் வறுமையையும் அவனைக் கண்ட மறுநாளில் என்னுடைய நிலை மாறிற்று. இவற்றை யெல்லாம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். அப்போது, நான் இருப்பது கனவோ என்று கலங்கியது நெஞ்சம். பிறகு நனவென்று துணிந்து பெருமிதம் கொண்டது. ‘சிறிது நேரம் காத்திருக்கட்டும்’ என்று சொல்லாமல், ‘அவர்களை விரைவில் அழைத்து வாருங்கள்’ என்று வாயிலோர்க்குக் கூறினான். நாங்கள் உள்ளே போனவுடன், ‘அருகில் வாருங்கள்’ என்று அழைத்தான். அவனிடம் சென்றவுடன் நாங்கள் முறைப்படி அவனை வணங்கி அவன் அன்பைப் பாராட்டினோம்.

 

கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு

செம்மறியாட்டுக் கிடாயின் பெரிய மேல் தொடையின் வெந்ததனை விழுங்குங்கள் என்று பல முறையும் வற்புறுத்தினான். இருப்புக் கோலில் கோத்து சுட்ட ஊனை வழங்கினான். அது சுட்டமையின் வாயின் இரு புறமும் மாறி மாறி ஒதுக்கி ஆற்றித் தின்றேன்.

அவ்வாறு தின்ற தசைகள் தெவிட்டிவிட்டு வேண்டாம் என்று சொன்னபோது இனிய சுவையும் வெவ்வேறாகிய பல வடிவத்தையுடைய பணியாரங்களையும் கொண்டு வந்து தின்னும்படி எங்களை வற்புறுத்தினான். அந்த உணவுகளை உண்ட மகிழ்ச்சியாலே, ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியர்கள் முழவினது தாளத்துக்கு ஏற்ப ஆடினார்கள்.

அவ்வாறு மகிழ்ச்சியையுடைய கள்ளை உண்பதிலே பல நாளைப் போக்கினோம். இப்படி ஊனையே தின்று கொண்டிருந்த எங்களுக்கு ஒருநாள் சோறாகிய உணவு கிடைத்தது. ‘இந்தச் சோற்றையும் உண்ணுங்கள்’ என்று வரியற்ற இடை முரியாத அரிசி விரலென்று தோன்றும்படி நீண்ட, ஒன்றோடு ஒன்று சேராத சோற்றையும் வழங்கினான்.

பிறகு பல கொட்டைகளைப் பொரித்து அவற்றோடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் நிரம்பும்படி விழுங்கினோம். இவ்வாறு அவன் வழங்கிய ஊனைத்தின்று எம்முடைய பற்கள் கொல்லை நிலத்திலே உழுத கொழு முனை மழுங்குவது போல, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனை மழுங்கிவிட்டன.

சற்றே இளைப்பாறவும் நேரம் இன்றி உண்டோம். இப்படி இருப்பது எங்களுக்கு அலுத்துப் போயிற்று. ஆகவே, ஒரு நாள் அவனிடம், ‘குற்றம் செய்த பகைவரிடத்து பெற்ற திறை வகையெல்லாம் முற்றச் செய்த தலைவனே’ என்று அழைத்து, ‘நாங்கள் எங்கள் பழைய ஊருக்குப் போகவேண்டும்’ என்று மெதுவாகச் சொன்னோம். அது கேட்ட அவன் எம்முடைய கூட்டத்தை விட்டுவிட்டு விரைந்து போகிறீர்களோ? என்று சொல்லும் போது கோபித்தவன் போல இருந்தான்.

அவனைப் பிரிவதில் எங்களுக்கு இருந்த வருத்தத்தை விட அவனுக்கு அதிக வருத்தம் இருந்தது.

கரிகாலன் வழங்கிய கொடை

பெண் யானைகளோடு சேர்ந்த ஆண் யானைகளை அதன் கன்றுகளுடனே ஏற்றுக் கொள்வாயாக என்று சொன்னான். பின்னும் ஊர்திகள், ஆடைகள், அணிகலன்கள் முதலியவற்றை மேன்மேலே தந்தான். அவன் கொடுத்த எல்லாவற்றையும் ஏற்றுச் செல்வது என்பது என்னாலே இயலாத காரியம். ஆகவே யானும் எனக்கு வேண்டியவற்றை யானறிந்த அளவிலே வாங்கிக் கொண்டேன்.
அவனிடம் பெற்ற பொருள்களால் என்னுடைய வறுமை நீங்கிற்று.

கரிகாலன் பெருமை

 

அவன் பகைவரிடத்தில் கோபம் கொள்பவன். முருகனது சிற்றம் போல அது இருக்கும். அவன் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே, தன் தந்தை இறந்து போனமையின் அரசுரிமையைப் பெற்றான்.

அவனுடைய பெருமையை அறியாமல் அவனை எதிர்த்துத் தோல்வியுற்றுப் பிறகு அவனுடைய வலிமையை அறிந்து அவன் சொன்ன தொழிலைச் செய்தார்கள்.

அவனுக்கு பணிந்து நடக்காமல் இருந்த பகைவர்கள், ‘இவன் நம்மை என்ன செய்து விடுவானே’ என்று அச்சம் பெருக இருந்தார்கள்.

மிக்க வெம்மையையுடைய சூரியன் கடலின் மீது தன் கதிர்களைப் பரப்பிப் பின்னர் வானத்திற்குச் சென்றாற் போல அவன் தோற்றினான். அவன் பிறந்தது முதல், சிறந்திருந்த சோழ நாட்டைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டு நாள்தோறும் அதன் வளம் பெருகும்படி வளர்த்தான்.

யாளியென்னும் விலங்கினையுடைய குட்டி, மிகுந்த வலிமையினாலே தன் தாய்ப்பாலை உண்ணும் பருவத்திலேயே, விரைவிலே தான் உண்ண விரும்பி வேட்டையாடி யானையைக் கொன்றது. அத்தகு வலிமை அதற்கு இயல்பிலே அமைந்திருக்கிறது. அதைப் போலவே கரிகாலனும் இருந்தான்.

கரிகாலன் செயல் (வெண்ணிப்பறந்தலை போர்)

கரிகாலன் இளம் பருவத்திலேயே சேரனையும் பாண்டியனையும் போரிட்டு வென்றான். பனை மாலையை அடையாளமாக அணிந்தவன் சேரன். ரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பையுடைய வேம்பின் அழகிய தளிராற் செய்த மாலையை அணிந்தவன் பாண்டியன். அவற்றைத் தம்முடைய தலைகளில் விளங்கும்படி அணிந்த இரண்டு பெரிய வேந்தர்களாகிய சேரனையும் பாண்டியனையும் ஒருசேரக் களத்தில் அழியும்படிச் செய்தவன் கரிகாலன்.

வெண்ணி என்ற ஊரில் இந்தப்போர் நடைபெற்றது. வலிய முயற்சியை உடைய அவன், ஆத்தி மாலையை அணிந்திருந்தான்.

கரிகாலன் வழங்கும் பரிசில்

அவனிடம் சென்று அவன் திருவடியைப் பணிந்து அவன் முன்னே நீங்கள் நின்றால், அவனுடைய பார்வை உங்கள் மேற்படும். கன்றுக்குப் பால்தர வேண்டுமென்ற கன்றை ஈன்ற பசுவைப் போல, உங்கள் தோற்றத்தைக் கண்டு, வறுமையை உணர்ந்து அதைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்ப்பான்.

அவனைக் கண்டவுடன் உங்கள் கலைத் திறமையைக் காட்டத் தொடங்குவீர்கள். நீங்கள் வாத்திய ஒசையை இசைப்பதற்கு முன்பே அவன் உங்களுக்கு நலம் புரியத் தொடங்குவான்.

அழுக்காகவும், தையலையுடையதுமாக இருக்கும் கந்தைத் துணியை நீக்கி, தூய கரையை உடைய பட்டாகிய உடைகளைத் தருவான். நீங்கள் பகுகுவதற்குக் கள்ளைத் தருவான். நீ விரும்பியப்படியே உண்பாயாக என்று வழங்குவான். நீங்கள் உண்ண உண்ண அவன் மேலே மேலே வழங்குவான். அதை ஒவ்வொரு நாளும் பருகுவீர்கள்.

இவ்வாறு உண்ட பிறகு ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழ் இல்லாத பொற்றாமரைப் பூவை, உங்கள் மயிரிலே சூட்டுவான். உங்களுடன் வரும் விறலிக்கும் அவன் பரிசில் தருவான்.

நூலில் கட்டாத பொன்னரி மாலையை ஒளியையுடைய பாடினி சூடிக்கொள்ள வழங்குவான். பிறகு பொருநனுக்கு விடை கொடுத்தனுப்புகிறான். எங்களை ஒரு தேரிலே ஏற்றினான். அந்தத் தேர் யானைக் கொம்பால் செய்தது. உயரமான தேர். அதில் பூட்டிய குதிரைகள் வெள்ளை வெளேரென்று பாலைப் போல இருந்தன. தலை மயிர் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய இருந்த அத்தகைய குதிரைகள் நான்கை அந்தத் தேரில் பூட்டினான்.

பிறகு எங்களை வழியனுப்பும்போது தன் காலாலே ஏழடி எங்கள் பின்னலே வந்தான். குதிரைபூட்டிய வண்டியை ஓட்டுவதற்கு தாற்றுக்கோலை அதன் முள் நீக்கிக் கொடுத்தான். அவன் ஏறுக என்று ஏற்றினான்.

வீறுபெற்ற யாழ்ப்பாணர்களுக்குக் கொடுக்கும் வரிசைகளையெல்லாம், உனக்குத் தருவான். அவை மட்டுமல்ல, உங்களுக்கு அவன் பல ஊர்களையுடைய நாடுகளையே வழங்குவான். அந்த ஊர்கள் வளம் மிக்கன. எப்போதும் நீர்வளம் பொருந்தியவை.

அங்கே வாழ்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று வாழ்வதனால் வேறிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பமே அவர்களுக்கு இராது. இவற்றோடு உங்களுக்கு யானைகளையும் வழங்குவான். இவ்வாறு பரிசில்களை அவன் இடைவிடாது தந்து கொண்டே இருப்பான்.

தன்பால் வரும் பொருநர், பாணர், விறலியர் ஆகியவர்களுக்கு இத்தகைய பரிசில்களைத் தருவதில் அவன் கை ஓயமாட்டான். நீங்கள் பெற்றவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு வர இயலாது. ஆதலின் நீங்கள் பெற்றவற்றில் உங்களால் எடுத்துச் செல்ல முடியாதவற்றை உங்களைப் போல வந்த வேறுவேறு பரிசிலர்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

சோழ நாட்டு வளம்

ஒல்லென்ற ஓசையோடு அலைகள் புரளும் கடற்கரை சூழ்ந்த அகன்ற இடத்தை உடையது சோழநாடு. அங்கே மிகுதியாக நெல் விளைகிறது. அவற்றைக் குதிர்களில் சேமித்து வைப்பார்கள். அங்கே தாழ்ந்த தென்னை மரங்களும் குளிர்ச்சியான சோலைகளும் நிரம்பியிருக்கின்றன. அங்கே உதிரத்தோடு கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுவார்கள். அவற்றைக் கரிய காக்கைகள் விழுங்கும். இவ்வாறு செஞ்சோற்றைப் பல காலும் உண்டமையினால் வேறு உணவை விரும்பி, நொச்சி மரங்களின் நிழலில் ஆமை ஈன்ற குட்டியை பிறகு பசித்த காலத்தில் தின்னலாம் என்று பாதுகாத்து வைக்கும்.

மருத நிலத்தில் உள்ள உழவர்களின் பெண்கள் விளையாடுகிறர்கள். நெய்தல் நிலத்தில் உள்ள மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடுகிறர்கள். கரிகாலனுடைய நாட்டில் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை. எல்லோரும் சமாதானமாக வாழ்ந்தார்கள். அரசனது அவையிலே ஒன்றாகக் கலந்து சென்று புகுவார்கள். அவர்களிடம் இருந்த மாறுபாடெல்லாம் போயிருக்கும். அவ்வாறு கரிகாலன் ஆட்சி புரிந்தான்.

மயில்கள் பல உள்ளன. பசிய பாகற் பழத்தையும் சிவந்த சுளையை உடைய பாலாப் பழத்தையும் தின்று, வளைந்து வளர்ந்த காஞ்சி மரத்திலும் செவ்விய மருத மரத்திலும் அவை தங்கிப் போகின்றன. நிலவளம் இருப்பதால் கரும்புகள் நன்றான வளர்ந்திருக்கின்றன. அவற்றை வெட்டி ஆலையிலிட்டுச் சாறு பிழிவார்கள். கரும்பை அறுக்கும் பொழுதும் நெல்லை அரியும் பொழுதும் உழவர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்து கொண்டே தம் செயலைச் செய்கிறார்கள்.

பகன்றை என்ற கொடி படர்ந்திருக்கிறது. தளிர்கள் நிரம்பிய புங்கை மரங்கள் உள்ளன. இவ்வளவு மரங்களையும் கொடிகளையும் உடையதாக உள்ள அந்தச் சோலை தாழ்ந்து இருக்கிறது. ஞாழல் என்னும் மரங்கள் அரும்புகளுடன் நிற்கின்றன. இப்படிப் பலவகை மரங்கள் சூழ்ந்தது அவ்விடம். அந்த இடத்தில் சில காலம் தங்கிச் சலிப்பு ஏற்பட்டால் அங்கிருந்து நீங்கி மாறுகின்றன.

முல்லை நிலத்தில் முல்லை படர்ந்திருக்கிறது. முல்லையினையும், கொன்றையினையும், நீலமணி போன்ற பூவினையுடைய காயாவினையும் உடைய நல்ல காட்டில் சில காலம் உறைவர். பிறகு அது சலித்துவிட்டால் மருத நிலத்துக்குச் செல்வார்கள். பிறகு அங்கும் சலிப்பு ஏற்படும்.

இனி, சுறாமீன்கள் உலாவுகின்ற விரிந்த கடலில் உள்ள இறால் மீன்களை உண்ட கூட்டமாகிய நாரைகள், பூக்கள் நிரம்பிய புன்னை மரத்தின் கிளையில் தங்கினால், ஓங்கி வீசும் கடல் அலையின் ஒசைக்குப் பயந்து இனிய பனை மரத்தின் மடல்களில் தங்கும். குலைகுலையாகக் காய்த்த தென்னை மரங்களின் காய்க் குலைகளையும், வாழையையும், கொழுவிய காந்தளையும், மலர்ந்த சுரபுன்னையையும் உடைய குடியிருப்பை உடைய பாக்கத்தில் வாழ்பவர்கள் அவ்விடத்தில் சலிப்பு ஏற்பட்டால் குறிஞ்சி நிலத்துக்குச் செல்கிறார்கள்.

குறிஞ்சி நிலத்தில் வண்டுகள் யாழைப் போல இசைபாடுகின்றன. அந்தப் பாட்டுக்கு ஏற்பத் தன் தோகை விரித்த இளைய மயில்கள் நிலவு போன்ற நிறமுடைய மணல் மேட்டில் பலவாகப் பெயர்ந்து செல்கின்றன.

திணை மயக்கம் (நிலம் மயங்குதல்)

குறிஞ்சி நிலத்தின் தேனையும் கிழங்கையும் கொண்டு போய் விற்கிறார்கள். அவற்றிற்குப் பதிலாக மீன் நெய்யையும் நறவையும் வாங்கிச் செல்கிறார்கள். இனிய கரும்புகளையும் அவலையும் கூறுபடுத்தி விற்கிறார்கள் சிலர். அவர்கள் அவற்றுக்குப் பதிலாக மான் தசையோடு கள்ளை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். குறிஞ்சி நிலத்தில் மிகுதியாகப் பாடப்படும் குறிஞ்சிப்பண் நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் பாடுகிறார்கள். நெய்தல் நிலத்திற்குரிய நெய்தல்பூவினை மலைவாழ் குறவர் சூடுகிறார்கள்.

முல்லை நிலமாகிய காட்டில் உள்ளவர்கள் மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணைப் பாடுகிறர்கள், மருத நிலத்திலுள்ள பாட்டுக்காரர்கள் நீல நிறம் பொருந்திய முல்லை நிலத்துக்குரிய பலவகைப் பாடல்களைப் பாடுகிறார்கள். முல்லை நிலத்திலுள்ள கோழிகள் மருத நிலத்தில் உள்ள நெற்கதிரைத் தின்கின்றன. மருத நிலத்தில் வீடுகளில் உள்ள கோழிகள் மலையில் விளையும் தினையைத் தின்கின்றன. மலையிடத்தில் வாழும் குரங்குகள் (மந்திகள்) நெய்தல் நிலத்துக் கழியிலே மூழ்கவும், கழியில் திரியும் நாரைகள் மலையிலே கிடக்கவும் என குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களும் உடைய நாடுகள் சேர்ந்தது சோழ நாடு.

உலகத்தில் உள்ளவர்கள் கரிகாலனப் புகழ்கிறார்கள். அப்படி இவ்வுலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாப்பவன் அவன். தன்னுடைய ஆட்சி எங்கும் பரவ, யாவரும் அவனுடைய ஆணை ஒன்றையே ஏற்கின்றனர். அன்பும், உதவியும், ஆட்சிச் சிறப்புமிக்க செங்கோலும், வெல்லுகின்ற வேற்படையையும் உடைய அந்தக் கரிகால்வளவன் வாழ்க!

காவிரியின் பெருமை

நல்ல ஒளியைப் பரப்புகிறான் கதிரவன். ஆதலால் மிகுந்த வெப்பம், பசுமைக்கே இடம் இல்லை. கஞ்சங்கொல்லை கருகுகின்றன. மரங்களின் கிளைகள் தீப்பற்றி எரிகின்றன. மலைகளிலிருந்து வீழும் அருவிகள் எல்லாம் வறண்டு போயின. மேகங்கள் கடலிலுள்ள தண்ணீரை எடுக்க மறந்துவிட்டன. இவ்வாறு மிகப்பெரிய பஞ்சம் உண்டாகி நற்குணம் இல்லாத பொல்லாத காலத்திலும், காவிரி தன் வளம் குன்றுவதில்லை. இப்படிப் பெரிய பஞ்சம் ஏற்பட்டு, நற்பண்புகள் எவையும் இல்லாமல் போன காலத்திலும் காவிரியாறு நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் தேக்கிக்கொண்டு போகிறது.

புது வெள்ளம் நுரையுடன் வருகிறது. ஆரவாரத்தோடு ஓடுகிறது. குளத்திலும் மடுக்களிலும் புகுகின்றது. ஆற்றில் நீர் வந்தமையால் மகளிர் குதித்து மூழ்கி விளையாடுகிறார்கள். இவ்வாறு வந்த வெள்ளத்தினால் நெல் நன்றாக விளைகிறது. அதை அறுவடை செய்கிறார்கள். நெற்கதிர் முற்றிச் சாய்ந்திருத்தலின் அவற்றை அறுப்பவர்கள் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லை அறுக்கிறார்கள். நெல் அறுவடையான பிறகு அவற்றைத் திரட்டி மூட்டைகளில் அடுக்குகிறார்கள். அரிந்த நெல்லின் கதிர்களை மலை போல அடுக்குகிறர்கள்.

ஒவ்வொரு நாளும் அறுத்த நெற்கதிர்களைக் கடாவிட்டு அடித்து நெல்லைத் திரட்டிக் குவிக்கிறார்கள். நெல் மூட்டைகளைக் குதிர்களில் சேமித்து வைக்கிறார்கள். செந்நெல்லின் விளைவு ஒரு வேலிக்கு ஆயிரம் கலமாக இருக்கிறது. அவ்வாறு உண்டாகும் வளம் காவிரியால் ஆகியது. அந்தக் காவிரியால் புரக்கப்படும் நாட்டுக்கு உரியவன் கரிகால்வளவன்.

**********

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...