சனி, 28 அக்டோபர், 2023

பதிற்றுப்பத்து - புலாஅம் பாசறை

 புலாஅம் பாசறை

சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது (ஏழாம் பத்து)

  •  பலாப்பழங்கள் பழுத்து அதன் நறுமணம் நாடுமுழுக்கப் பரவும்படி அமைந்த மலைநாட்டை உடையவன்!
  •  மிகச்சிறந்த ஓவியனால் வரையப்பெற்ற ஓவியம் போன்று அமைந்த அழகுமிக்க மனைவியை உடையவன்!
  •  பொன்னால் செய்யப்பட்டது போன்ற சிறியபூவை உடைய உன்னமரத்தின் பகைவன் எம் தலைவன்! (உன்னத்துப் பகைவன் எம்கோ)
  •  மணம்வீசும் சந்தனம் மார்பில் பூசியவனும், யார்வந்து கேட்பினும் பொருளைத் தருபவனுமாகிய பெரிய கையுடையவன் எம் தலைவன் பாரி.
  •  இரவலர்கள் தங்கள் முழவில் பூசிய மண் காய்வதற்குள் பொருளைத் தருபவன். ஆனால் தற்போது பூசப்பட்ட மண் காய்ந்துவிட்டது. இரவலர்களும் ஏங்கித் தவிக்கின்றனர். திரும்ப வரமுடியாத இடத்திற்குச் சென்றான் எம் தலைவன் பாரி.
  •  அவன் இறந்துவிட்டான் என உன்னிடம் இரந்துகேட்க (பிச்சையெடுக்க) வரவில்லை.
  •  பொருளை வாரி வழங்கும் உன் வள்ளல் தன்மை கருதியே உனைக் காணவந்தேன்.
  •  ஒளிவீசக்கூடிய வாளும், யானைக்கூட்டங்களும் இருக்கக்கூடிய புலால் நாற்றம் வீசும் பாசறையில் நீ தங்கியிருக்கிறாய்.
  •  நிலவு போன்ற நெற்றியை உடைய பாடினி முழவினை இசைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
  •  திருவிழாவினைப் போன்ற இவ்விடத்தில் நீ மகிழ்ந்திருக்கிறாய்.

பதிற்றுப்பத்து - கழைஅமல் கழனி

 கழைஅமல் கழனி

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது (நான்காம் பத்து)

  •  பல போர்களில் ஈடுபட்டு பலரையும் வென்ற தலைவன் நீ!
  •  உன் நற்குணமும் சிறப்பும் நான்கு திசைகளிலும் சென்று விளங்கித்தோன்றும்.
  •  முத்துடைய கொம்புகளைக்கொண்ட யானை போர் வேட்கையால் பிளிறுமாறு அதன்மீது அமர்ந்து, தூசி மிகுந்து எழும் காலாட்படையோடு பகைவர் நாட்டின்கண் செல்பவனே!
  •  பெரிய சுற்றத்தார்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு பகைவர் நாட்டில் பெற்ற அரிய பொருள்களைக் கொடுத்து அதனால் பெரும் மகிழ்வு கொள்பவனே!
  •  கழங்குகளால் முடிவறிந்து கூறும் நிலையை மாற்றி, போரில் வெற்றி பெறுபவனே!
  •  நீ பெற்ற வெற்றிகள் அனைத்தையும் எண்ணிப்பார்க்குமிடத்து, உன் குணங்களுள் ஒன்றுமட்டும் நான் வியந்து நோக்கினேன்.
  •  எதிரிகள் செய்கிற கொடிய போரில், மலைபோன்ற யானைப்படையைக் கொண்டு சென்று அவர்கள் நாட்டில் உள்ள நீண்ட காலுடைய நாரைகள் தங்கி இரை உண்ணும் மூங்கில் போன்று வளர்ந்த நெல்வயல்களை உடைய நாட்டைத் தன்வயப்படுத்தி அங்கேயே தங்கி இருந்தபோதும், கோபம் கொள்ளாமல் வீற்றிருக்கும் உன்னைக் காணும்போது எனக்கு வியப்பு உண்டாகிறது.

பதிற்றுப்பத்து - சான்றோர் மெய்ம்மறை

சான்றோர் மெய்ம்மறை 
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது (இரண்டாம் பத்து)

  •  நிலம், நீர், காற்று, ஆகாயம் (வானம்) ஆகிய நான்கைப் போன்று அளவிட முடியாதவனே!
  •  நாள், கோள், நிலவு, சூரியன், நெருப்பு (தீ) இவ்வைந்தும் இணைந்த புகழ் பெற்றவனே!
  •  போரை மிகுதியாக விரும்பிய கௌரவர்கள் நூறுபேருடைய படையில் வீற்றிருந்த கர்ணன் (அக்குரன்) போன்ற வலிமை வாய்ந்தவனே!
  •  தும்பைச்பூவைச் சூடிவரும் பகைவரை நேருக்கு நேர் நின்று களத்தில் அழிக்கும் ஆற்றல் பெற்றவனே!
  •  எமனின் கோபத்தையும் அடக்கும் ஆற்றல் மிக்கவனே!
  •  முடிபொருந்திய செல்வம் மிகுந்த அரியணையில் வீற்றிருந்தாலும் தன் படைவீரர்களுக்கும், தம் மக்களுக்கும் (சான்றோர்களுக்கு) கவசம் போன்று விளங்குபவனே!
  •  வானுலகத் தேவர்களுள் மிக்க அழகு மிக்கவர்களாக விளங்கக்கூடிய பெண்களே (ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை உள்ளிட்ட பலர்) வியந்துபோற்றும் அழகுடைய மனைவியை உடையவனே!
  •  மிக்க யானைகளை உடையதும், நீண்ட நெடிய கொடிபொருந்திய தேர்களை உடைய வேந்தனே!
  •  சூரியன் சுற்றிவருகின்ற கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்தை முழுதும் ஆண்ட உன் முன்னோர்களைப் போல நீயும் புகழ்பெற்று நிலைத்து இவ்வுலகை ஆட்சி செய்வாயாக.

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...