செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தாய் - மக்சீம் கார்க்கி – தமிழில் தொ.மு.சி. ரகுநாதன்

 



தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறியலாம். இதனைப் பல்வேறு ஆய்வுகளும் நிறுவுகின்றது. பெண்ணே அனைத்தையும் வழிநடத்துபவளாக இருந்துள்ளாள். இந்நிலையில் பொதுவுடைமைச் சித்தாந்தம் (கம்யூனிசம்) பரவியுள்ள நாடுகளிலும் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எழுந்த பல படைப்புகளுள் முக்கியமானது ‘தாய்’ நாவல். மக்சீம் கார்க்கி அவர்கள் எழுதிய இந்நாவல், கம்யூனிசச் சித்தாந்தத்தின் அடிப்படையைப் பரப்ப முயன்ற தன்னுடைய மகனுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்தாள்.

உதவிசெய்ய முனைந்த தாய் என்னென்னச் சிக்கல்களை அனுபவித்தாள் என்பதை நாவல் மிகவிரிவாகப் பேசுகிறது. தொ.மு.சி. ரகுநாதனின் தமிழ் மொழிபெயர்ப்பில் தாய் மேலும் மிளிர்கிறாள். தாயின் சிறப்பினைப் பாரதிதாசனும், கலைஞரும் அவர்களது பார்வையில் கலைநயத்துடன் போற்றியுள்ளனர். தாய் நாவலை இதுவரை படிக்காதவர்கள் தயவுசெய்து படித்துப் பாருங்கள்…… தாயின் நிலை என்னவானது என்பதை நாவலில் காணுங்கள்……


திங்கள், 14 பிப்ரவரி, 2022

தொல்காப்பிய அறிமுகம் - டாக்டர் பொற்கோ


 

இலக்கணம் சிலருக்கு வேப்பங்காயினும் கசப்பாய் இருக்கும் என்பர். நன்னூலை விட தொல்காப்பியம் கடின நடையுடன் விளங்குகின்றது என்பது சிலர் கருத்து. ஏன் மரபிலக்கணங்கள்? மரபினைப் பின்பற்றி எழுதும் வழக்கம் இன்றில்லையே… என்பது சிலரின் எண்ணம். மரபிலக்கணங்களை விடுத்து, அதனை மீளாய்வு செய்து – மீள் வாசிப்புக்கு உட்படுத்தி – மீள் கட்டமைப்பு செய்யவேண்டிய தேவையுள்ளது என்பர் சிலர். இதுபோன்ற பல்வேறு இலக்கணக் கட்டமைப்பு கருத்தாக்கங்கள் உருவானபோதிலும் தொல்காப்பிய மூலத்தினைப் படித்துணராமல் இதனைப் பேசுவது வீண்வேலை.

தொல்காப்பியம் தொடங்கிப் பல்வேறு இலக்கண நூல்கள் கிளைத்து வளர்ந்து விழுதூன்றியுள்ளன (காண்க: ச.வே.சு. – தமிழ் இலக்கண நூல்கள்). அவற்றுள் வீரசோழியம் தவிர்த்த ஏனைய நூல்கள் தொல்காப்பியத்தை அடியொற்றியே அமைந்துள்ளன. எனவே மற்றைய இலக்கண நூல்களை நாம் அறிந்துகொள்வதற்கு முன்பு தெரிந்திருக்கவேண்டியது தொல்காப்பிய இலக்கணமும் அதுதோன்றிய சூழலுமே. வெறும் மூலத்தை மட்டும் படித்துப் பொருள்தெரிந்து கொள்ள முயல்வது ‘குன்று முட்டிய குரீஇ போல’ (உரையாசிரியர் குறிப்பிடுவது) ஆகிவிடும்.

எனவே அதற்கான முன்னுரையாக இடம்பெற்றுள்ளதும், அதனை அறிமுகம் செய்து வைக்கின்ற விதத்தில் அமைகின்றதுமான தொல்காப்பிய அறிமுகம் என்ற இந்நூலினை (தொடர் சொற்பொழிவின் தொகுப்பு) முறையாக வாசித்தால் நன்மை ஏற்படும். தொல்காப்பிய இலக்கணத்தை நன்றாக உணர்ந்து அதனையே மொழியியல் நோக்கில் ஆராய்ந்தவரும் புத்திலக்கணம் படைத்த (இக்காலத் தமிழ் இலக்கணம்) ஆசிரியருமான பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள், அதனை விளக்கிச் செல்லும் பாங்கு ஒரு குழந்தையை வழிநடத்துவதை ஒக்கும். இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை. அவருடைய நூல்களைப் படித்துணர்ந்தோருக்கு இது தெளிவு.

தொல்காப்பியம் முழுவதையும் படித்தவர்களுக்கு இந்நூல் ஒரு குறிப்பேடாகவும், முதன்முதலில் படிக்கப் புகுவோருக்கு இந்நூல் ஒரு கைவிளக்காகவும் அமையும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.


திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும், ச.சு. இளங்கோ

 




இடித்துச் சிதறும் எரிமலைக் குழம்புபோல் வெடித்துச் சிதறி விரையும் கவி பாரதிதாசன் (அப்துல் ரகுமான்). பாரதிதாசனின் தொடக்காலத்தில் பக்திநெறியில் நின்று தன்னுடைய பாடல்களைப் பாடினாலும், திராவிட இயக்கத்தின் தொடர்பிற்குப் பிறகான அவருடைய பாடல்கள் எரிமலைக் குழம்புபோல் கனல்களாகத் தெரிக்கத் தொடங்கியிருந்தன. சாதி, சமயம், மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், கடவுள் மறுப்பு, தொழிலாளர் இயக்கம், ஆரியர் எதிர்ப்பு, இன உணர்வு, மொழி உணர்வு என அனைத்துத் தளங்களிலும் தன்னுடைய கவிதைகளைப் பதிவு செய்துள்ளார். இதனை ஆய்வுநோக்கில் ஆராய்ந்ததே இந்நூல்.

திராவிட இயக்கப் பின்னணியில் பாரதிதாசன், திராவிட இயக்கக் கோட்பாடுகளும் பாரதிதாசனும், பாரதிதாசன் படிநிலை வளர்ச்சி என்ற மூன்று தலைப்புகளில் விரிவான ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளார் பாரதிதாசன் ஆராய்ச்சியாளர் ச.சு. இளங்கோ. திராவிட இயக்க வரலாற்றில் பாரதிதாசனின் இடத்தை விரிவாக விளங்கிக்கொள்ள இந்த ஆராய்சி நூல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது வெள்ளிடை மலை. 




பாரதிதாசன் கனல்கள் - மா. செல்வராசன்

 


பாரதியின் வழிகாட்டுதலில் நடந்தவர், பாரதியைத் தன்னுடைய மேலான குருவாகக் கொண்டவர் அவருடைய தாசனாக வாழ விரும்பியவர் பாரதிதாசன். ஆனால் குருவை விஞ்சிய சீடனாக வலம்வருகிறார் பாரதிதாசன். புதியதோர் உலகை உருவாக்கப் புறப்பட்ட பாரதிதாசன் அமைதியின் உருவாக மட்டுமல்லாமல், பகுத்தறிவுக் கனலாகப் பொங்கியெழுந்தவர். பெண்ணடிமையை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் தாம் படைத்த மூன்று காப்பியங்களில் அதனைச் செயல்வடிவம் கொடுத்தும் காட்டியவர். அவருடைய பாடல்களில் புயலும், தென்றலும் மாறிமாறி வீசும்.

சாதியும், சமயமும், பெண்ணடிமைத்தனமும், பொதுவுடைமை இல்லாமையுமே இன்றைய உலகு சீர்கெட்டுக் கிடக்கக் காரணம் எனக்கூறும் அவரின் வார்த்தைகள் கனல்களாகச் சுட்டெரிக்கிறது. சோசலிசம், கேப்பிடலிசம், கம்யூனிசம், பாசிசம், நாசிசம், நியுடிலிசம் போன்ற இசங்கள் (கொள்கைகள்) குறித்து மிகத் தெளிவான விளக்கத்தைப் பகர்கிறார். இதுபோன்ற அரிய கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதனைப் படிப்பவர் கனல்களாகப் பொங்கிஎழுவது திண்ணம். இன்றைய தேவையும் இதுவே….. வெறும் ‘கரி’யாக இல்லாமல் கனலாக இருப்போம்.

தமிழிலக்கணக் கோட்பாடுகள் - டாக்டர் பொற்கோ

 


தமிழில் இலக்கண வரலாற்றுக் காலக்கட்டம் என்ற ஒன்றைப் பகுத்துப் பார்த்துவிட முடியும். கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான இலக்கண வளர்ச்சி என்பது குறைவு. அதன்பிறகு 19 ஆம் நூற்றாண்டளவில் மொழியியல் என்னும் துறை தோன்றி இலக்கண வளர்ச்சி இல்லாத குறையினை நிறைவித்தது என்றே கூறலாம். அந்நேரத்தில் 20 ஆம் நூற்றாண்டளவில் மொழியியல் அடிப்படையில் இலக்கணத்தைத் தோற்றுவித்தவர் டாக்டர் பொற்கோ. அந்த நூல்தான் இக்காலத் தமிழ் இலக்கணம். தமிழிலக்கணம் சார்ந்த கோட்பாடுகள் சிலவற்றை இந்நூலில் குறிப்பிடுகிறார். சார்பெழுத்து, அடிநிலைக்கிளவி, சொற்பிரிப்பு, சாரியை, பால்பாகுபாடு, வேற்றுமை போன்றவற்றின் கோட்பாடுகளை இந்நூல் பேசுகிறது. இலக்கண ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்.   

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...