திங்கள், 10 ஜனவரி, 2022

புனைபாவை


 


 



வரலாறு என்றாலே நம் மனங்களில் தோன்றுவது போர், போர்க்கருவிகள், படைகள், வெற்றி / தோல்வி போன்ற எண்ணங்களே. இவையனைத்தும் ஒருவர்மீது ஒருவர் மண்ணுக்காகவோ, பொன்னுக்காகவோ, தன் வலிமையைப் பறைசாற்றுவதற்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தினை ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள்ளும், பல்வேறு அயல்நாடுகளிலும் போரிட்டு தன்னுடைய வலிமையைப் பறைசாற்றி வந்துள்ளனர். அந்நியப் படையெடுப்பில் இவர்களையும் வெற்றிபெற்று தமிழகத்தை ஆண்டோர் பலர். அவர்களுள், பல்லவர்கள், களப்பிரர்கள், நாயக்கர்கள், நிஜாம்கள், முகலாயர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பல குறுநில மன்னர்கள் அடங்குவர். இவ்வாறாக பல்வேறுபட்ட மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றில் வேறுபாடுகள் நிறைந்தவர்கள் நம்மை ஆண்டுள்ளார்கள். இந்த வரலாற்றை இன்று நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். பாட நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் மூலம் நாம் அடைந்த துயரம் ஒருபுறம் இருப்பினும் பெற்றதும் ஏராளம்.

 வரலாறு படிக்க நினைக்கும்போது சில நேரங்களில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், மதன் எழுதிய கி.மு. கி.பி. என்ற நூலும், இரா. முருகவேள் எழுதியுள்ள புனைபாவை நாவலும் (நான் படித்தவற்றுள்) வரலாற்றை மிக எளிமையாக எடுத்துரைக்க முயல்கிறது. இந்நாவலில் முழுமையான தமிழக வரலாற்றையும் எழுதாவிட்டாலும், பாண்டியர்களின் வீழ்ச்சி பற்றிய சுருக்கத்தைப் புனைவாக எடுத்துரைத்திருப்பது சிறப்பு. இந்நாவல் எழுதுவதற்குப் பல வரலாற்று நூல்களின் உதவியினைப் பெற்றிருக்கிறார் என்பது அவரது முன்னுரையிலும், பின்னிணைப்பில் உள்ள துணைநூற் பட்டியல் மூலமும அறிய முடிகிறது. ஒரு நாவல் எழுதுவதற்குத் துணைநின்ற நூல்கள் என பட்டியலிடுவது புதுநடைமுறை (எனக்குத் தெரிந்த அளவில்).

       சைவ, சமண மதங்களின் புரட்சி, வணிகர் – வேளாளர் சமூகத்திற்கு இடையே நடக்கும் போராட்டம், அதற்கு அடித்தட்டாக அமையும் சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள், காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்வியல், வெளிமக்கள் தொடர்பால் அவர்களின் வாழ்க்கைத்தர நிலை, அங்குள்ள வளங்களைச் சுரண்டுதல் போன்ற வரலாற்றை மையப்படுத்தி புனைவிலக்கியமாக எழுதிய நாவலே புனைபாவை என்பதாகும்.

       பல கிளைக்கதைகளைக் கொண்டதாக நாவல் விளங்குகின்றது. சிவபெருமானின் திருவிளையாடல்கள், நாயன்மார்களின் வரலாறு போன்றனவும், சைவ மதத்தைப் பரப்ப சோழர்கள் மேற்கொண்ட முயற்சிகள், பல்லாயிரக்கணக்கான சிவன் கோயில்கள் கட்டும் பணிகள் நடைபெற்ற விதம், சமணம் அழித்து அதன் இடத்தைச் சைவம் வேரூன்றும் வரலாறு போன்றன இந்த நாவலின் வழி அறிய முடிகிறது. சிவபெருமானின் லிங்க வடிவமும், நடராஜர் உருவமும் இதில் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

       வணிக – வேளாளர் இடையே நடைபெறும் மோதல்கள், அரசைக் கைப்பற்ற முயற்சிக்கும் வணிகக்கூட்டம், செல்வத்தைப் பெருக்குதல் என்ற ஒரே நோக்கத்தோடு, போரிடும் முறையில் தாம் கண்டுபிடித்த கருவிகளை உள்நாட்டில் அல்லாமல் அயல்நாடுகளில் விற்பனை செய்தல், குதிரை வளர்ப்பு முறை, குதிரைவீரர்களுக்கு விற்பயிற்சி அளித்தல், அவர்கள் அமர்ந்து செல்லும் சேனம் உள்ளிட்ட கருவிகள் தயாரித்தல், அவற்றில் உள்ள நுட்பம், படைக்கருவிகள் செய்வதில் உள்ள தொழில்நுட்பம், அதற்கான உருக்குகளைத் தயாரித்தல் போன்ற பல்வேறு செய்திகள் இந்நாவலில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதும், தமிழகத்தை அரசாட்சி செய்த ஒருவரும் அதனைப் பற்றிய நேர்மறையான எண்ணமில்லாமையும் அதனால் அழிந்துபோன வரலாற்றையும் இந்நாவல் பதிவுசெய்கிறது.

       பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் பழக்கவழக்கங்களைச் சிதைத்து, நம்பிக்கை போன்றவற்றை பாழ்படுத்தி, மலைப்பகுதிகளில் உள்ள தாதுக்கள் சுரண்டப்பட்டு, இதுவரை அறிந்திராத தொழில்களில் அவர்களை ஈடுபடுத்தி, உழைப்பைச் சுரண்டி அடிமைகளாகக் கொண்டுசென்ற நடைமுறை வரலாறு இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் உருக்குகள் அயல்தேசங்களில் விலைமதிப்பில்லாதவையாகக் கருதப்படுவது அயல்நாட்டுப் பயணிகள் மூலமும், குழுக்கள் மூலமும் அறியக்கிடைக்கிறது. சோழ மன்னர்கள் தங்களின் படைபலத்தை இழந்ததும், வணிகக் குழுக்கள் அவற்றை அதிகரித்ததும் சோழரின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.

       பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம், படைக்கருவிகளின் வலிமையின்மையாலும், வாரிசுச் சண்டைகளாலும், மாலிக்காபூரின் படையெடுப்பினாலும் அழிந்தது. மருத்துவ நூல்களின் பெருக்கமும், மருத்துவ முறைகளில் மாற்றமும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறின. இருப்பினும், அவற்றை முறையாகப் பராமரிக்காத காரணத்தினாலும், அறுவை சிகிச்சைகள் மதத்திற்கு விரோதமானவை என்ற நம்பிக்கையினாலும் அவைகள் அழிந்தன.

       இதுபோன்ற பல்வேறு வகையான செய்திகள் இந்நாவலில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், சோழ, பாண்டியரின் வீழ்ச்சியின் கதை, தமிழக இயற்கை வளங்கள் கொள்ளை என்ற அளவில் இந்நாவல் புனையப்பட்டுள்ளது.

----
💖 முனைவர் போ. ஜான்சன்

சனி, 1 ஜனவரி, 2022

புத்தாண்டு வாழ்த்துகள் 2022

 


அறிவியல் விளைவு அகிலம் நிறைக்க

அரசு தந்த அறிவுரை கேட்டு

அமைதியாய் நாமும் அடங்கினோம் வீட்டினுள்

 

அறமே செய்து அன்பில் மகிழ

ஆர்வம் கொண்டு ஆயிரம் உதவிகள்

நீட்டினர் பலரும் நீக்கமற எங்கும்

 

கரோனா என்னும் காரிருள் அகற்ற

தடுப்பு மருந்தைத் தந்து (உ)தவினர்

மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் யாவரும்

 

தளர்வுகள் நீங்கித் தடுமாற்றம் (இ)ல்லாமல்

தளர்ச்சி நீக்கித் துணிந்து எழும்போது

ஒமிக்ரான் வந்து உளமதைப் பதைக்க

நினைக்கும் போது நிழலாய் உறைகிறேன்

 

தடைகள் பலவும் தாண்டுவோம் என்ற

நம்பிக்கை கொண்டு வரவேற்போம்

புத்தாண்டில் நமக்குப் புத்தொளி பிறக்கவே…..

 

மனதிற்கினிய புத்தாண்டு வாழ்த்துகள்

2022

------------






சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...