அறவண அடிகளிடம் ஆபுத்திரன் வரலாறு கேட்டல்
• ஆபுத்திரன் யார்? என்ற கேள்விக்கு விடைதேடும் வகையில் மணிமேகலையும்
சுதமதியும் அறவண அடிகளிடம் கேட்க வந்தனர்.
• “நீங்கள் கூறுங்கள், அடிகளே!” என்று மணிமேகலை கேட்க, அவனுடைய
வரலாற்றை அவர்களுக்குக் கூறத் தொடங்கினார் அறவணர்.
ஆபுத்திரன் பிறப்பு
· “வாரணாசி என்ற காசிநகரத்தில் அபஞ்சிகன் என்ற ஓர் அந்தணன்
இருந்தான். அவன் வேதத்தை ஓதுவிக்கும் தொழிலைக் கொண்டவன். அவனுடைய மனைவியின் பெயர் சாலி.
· கற்புநெறி தவறி, அந்தப் பார்ப்பினி தனது கணவனுக்குத் தவறு
இழைத்துவிட்டாள். அதன்பின், அவளுக்குக் குற்ற உணர்ச்சி மிகுந்தது. தான் செய்த குற்றத்திற்கு
என்னசெய்வது என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தபோது தீர்த்தயாத்திரை செல்லும் கூட்டம்
ஒன்று குமரிக் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தது.
· அவளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். நெடுங்கால யாத்திரை
என்பதால் அவளது சூல் மெல்லமெல்ல வளர்ந்து நிறை கர்பிணியாகிவிட்டாள்.
· ஒருநாள் இரவு எவருக்கும் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் சிசுவைப்
பெற்று இறக்கிவைத்தாள். புற்கள்நிறைந்த பரப்பில் அந்தக் குழந்தையைக் கிடத்தினாள். அதன்பின்
அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
ஆபுத்திரனுக்குப் பசு பால் அளித்தல்
o
பசித்தவுடன்
குழந்தை அழத் தொடங்கியது.
o
சிசுவின்
குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது.
o
ஆவின் பாலை
உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால்
நக்கிக் கொடுத்தது.
o
இது இப்படியே
ஒருவாரம் தொடர்ந்தது.
ஆபுத்திரனை ஏற்றுக்கொள்ளுதல்
v வயனங்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பூதி என்ற அந்தணன் ஒருவன் அந்த
வழியாகப் போய்க்கொண்டிருந்தான். சிறுகுழந்தை அழுவதையும் அதற்குப் பசு ஒன்று பால் வழங்குவதையும்
அவனும் அவன் மனைவியும் கண்டார்கள்.
v பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் இருந்த அத்தம்பதி, இனிமேல்
இதுதான் நம் குழந்தை என்று என்று அந்தணன் சொன்னதும் அவன் பத்தினி ஓடிச்சென்று அந்தக்
குழந்தையை அள்ளிக்கொண்டாள்.
v “தங்கள் குலம் தழைக்க நம்பி பிறந்துவிட்டான்” என்ற பெரிய
உவகையுடன் அந்தணன் அக்குழந்தையைத் தங்களது இல்லத்திற்கு எடுத்துச் சென்றனர்.
v நாள் பார்த்துப் ஆபுத்திரன் என்ற பெயர் சூட்டினார்கள். உரிய
பருவத்தில் அவனுக்கு முப்புரிநூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தி, வேதம் பயில்விக்க அந்தணர்களிடம்
அனுப்பினர்.
v வேதம்பயிலும் அந்தண இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து
சாத்திரங்களையும் அவன் கற்றுக்கொண்டான். கல்வியிலும் மறை ஓதுவதிலும் சிறந்து விளங்கினான்.
வேள்வியும் ஆபுத்திரன் செயலும்
Ø அன்றொருநாள் ஆபுத்திரன் வழியில் போய்க்கொண்டிருந்தபோது ஓர்
அந்தணர் வீட்டின் வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்தது. “ஏதாவது நிகழ்விருக்கும்” என்று
எண்ணிய ஆபுத்திரன் உள்ளே சென்று பார்த்தான். பெரிய வேள்விக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பது
தெரிந்தது.
Ø சுடுமணலால் புனையப்பட்ட பெரிய யாககுண்டம் ஒன்று தெரிந்தது.
வேள்விக்கூடத்தின் தூண் ஒன்றில் பசுமாடு ஒன்றைக் கட்டியிருந்தார்கள். அப்பசுவின் கொம்பில்
பூ சுற்றியிருந்தார்கள்.
Ø அதன் உடல் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டிருந்தது. நெற்றியில்
நீளமாகச் செந்தூரம் தீட்டபட்டிருந்தது. முதுகில் ஒரு புதுத்துணி போர்த்தபட்டிருந்தது.
Ø இவ்வளவு அலங்காரம் செய்திருந்தும் அதன் கண்களில் மகிழ்ச்சி
இல்லை. வேடுவர்கள் துரத்திவரும்போது மருண்டுநிற்கும் மானின் அச்சம் நிறைந்த கண்களைப்போல
அதன் கண்கள் விளங்கின. அதன் மேனி பயத்தில் நடுங்கியபடி இருந்தது.
Ø ஆபுத்திரனுக்கு அந்தப் பசுவின் துயரநிலை மனதை வருத்தியது.
உடனே அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
பசுவின் செயல்பாடு - அந்தணர் இகழ்தல்
ü அந்த இடத்திலேயே இரவு வரும்வரை தங்கியிருந்தான். பகலில் கொண்டுசென்றால்
தனது செயல் தடுக்கப்படும் என்பதால் இரவு வந்ததும் ஒருவருக்கும் தெரியாமல் பந்தலுக்குள்
நுழைந்து தூணில் கட்டபட்டிருந்த பசுவின் கயிற்றை அவிழ்த்து, கொண்டுசென்றான்.
ü வேள்விச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பசுவைக் காணாமல்
அந்தணர்கள் வழியெல்லாம் தேடிக்கொண்டிருக்கும்போது ஆபுத்திரன் அந்தப் பசுவடன் செல்வதுகண்டு
அவனை வழிமறித்தனர்.
ü “கையில் பசுவைப் பிடித்துக்கொண்டு போகக்கூடாத வழியில் போகும்
நீ பையனா? இல்லை புலையனா? எதற்காக எங்கள் வேள்விப்பசுவை இப்படித் திருடிக்கொண்டு செல்கிறாய்?”
என்று கேட்டனர். அந்தக் கூட்டத்தில் ஓர் அந்தணன் கையில் வைத்திருந்த கம்பால் ஆபுத்திரனை
அடித்தான்.
ü அந்தப்பசு, ஆபுத்திரனை அடித்துக் கேள்விகேட்ட அந்தணனின் வயிற்றைத்
தனது கூரிய கொம்பினால் கிழித்து, ஆபுத்திரனின் கயிற்றுப் பிடியிலிருந்து விடுபட்டு,
அருகில் இருந்த காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிமறைந்தது.
பசுவிற்காகப் பரிதல் – அந்தணர்கள் சினம்
v ஆபுத்திரன் அந்த மறையோர்களைப் பார்த்து, “வேள்வி என்று கூறிப்
பசுவைப் பலிகொடுப்பது முறையாகுமா? நீங்கள் போடும் புல்லைத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும்
உங்களுக்குத் தேவையான பாலை அளிக்கும் அந்தப் பசுவை வதைக்கலாகுமா? பாவமில்லையா அது?
இந்தப் பசுமீது உங்களுக்கு எதற்காக இவ்வளவு சினம்? முற்றும் அறிந்த அந்தணர்களே, பதில்
கூறுங்கள்!” என்றான்.
v “யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்? நாங்கள் யார் தெரியுமா?
அழகிய அணிகளுடன் விளங்கும் பொன் சக்கரத்தைத் வலக்கரத்தில் சுழலவிட்டுக்கொண்டிருக்கும்
ஆதி கடவுளான மகா விஷ்ணு (திருமால்), தனது நாபியில் தோன்றிய பிரமனுக்கு வாழ்வின் நெறிகளை
உபதேசித்தான்.
v பிரம்மன் அதனை மனுவிற்குச் சொன்னார். மனு எங்களுக்கு உரைத்தான்.
மனுதர்மம் பிறழாமல் நடக்கும் வைதீக பிராமணர்களான எங்களுக்கு நீ உபதேசம்செய்ய வந்துவிட்டாயா?
v நீ அந்த மாட்டுக்குப் பிறந்தவன் போல புத்தியில்லாமல் பிதற்றுகிறாய்.
நீ மனிதனா என்றுகூட ஐயமாக இருக்கிறது. மாட்டுக்குப் பிறந்தவனே!” என்று இகழ்ந்தனர்.
தேவர்களின் பிறப்பு – சாலியின் வரலாறு
Ø “நீங்கள் வணங்கும் தேவர்களின் வரலாற்றைச் சொன்னால் ஒருநாள்
போதாது. பசுவிற்கு மகனாகப் பிறந்தவன் அசலன்; மான் பெற்றெடுத்த மகன் சிருங்கி; புலிக்குப்
பிறந்தவன் விரிஞ்சி; வானுலகும் வணங்கும் கேசகம்பளன் நரிக்குப் பிறந்தவன் என்பதை மறந்து
விடாதீர்கள், நான்மறை ஓதும் பிராமணர்களே! முதலில் குற்றம்கூறும் முன்னர் உங்கள் குறைகளைத்
தெரிந்துகொண்டு குற்றம் கூறுங்கள்” என்றான் ஆபுத்திரன்.
Ø “வாயை மூடு” எனச் சீறினார். இவன் பிறப்பு நமக்குத் தெரியாதா? என்று கூறினார் ஒரு பிராமணர்.
Ø “ஒரு தீர்த்தயாத்திரைக் கூட்டத்தில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன்.
கன்னியாகுமரி போய் பாவத்தைத் போக்கச் சென்றிருந்தோம். நடக்கமுடியாமல் சிரமத்துடன் ஒரு
பார்ப்பனத்தி உடன் வந்தாள். யாரென்று விசாரித்தேன். காசியிலிருந்து வருவதாகவும், அவள்
பெயர் சாலியென்றும் சொன்னாள்.
ஆபுத்திரன் வரலாறு
o
“காசி நகரில்
என் கணவர் வேதம் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறார். கற்புநெறி பிறழ்ந்து அவருக்குக்
களங்கம் ஏற்படுத்திவிட்டேன். அப்பாவத்தினைக் கரைக்க குமரிக்கடலில் குளிக்க எண்ணி இவர்களுடன்
சேர்ந்துகொண்டேன் என்றாள்.
o
‘பொன்தேர்
கொண்ட பாண்டியன் செழியன் என்பவனது தென்மதுரை நகரைக் கடந்து சிறிது தூரம் சென்றபின்பு
மாடு மேய்க்கும் கோவலர்களின் குடியிருப்புப் பகுதி வந்தது. நிறைமாத கர்ப்பமான எனக்குப்
பேறுகால வலி எடுத்தது.
o
நான் அருகிலிருந்த
தோட்டத்தில் குழந்தையை ஈன்று, அதன் முகத்தில்கூட விழிக்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டேன்.
அப்படிப்பட்ட பாவியாகிய எனக்குப் பாவ விமோசனமே கிடையாது என்று கூறி அழுதாள். அந்தப்
பாவியின் மகன்தான் இந்த ஆபுத்திரன்.
ஆபுத்திரன் பதிலுரையும் – அந்தணர்கள் முடிவும்
ü ஆபுத்திரன் அவர்களுடைய வசைமொழிகளைக் கேட்டு ஆத்திரம் கொள்ளாமல்
புன்னகைத்தான். தன் பிறப்பிற்கும்,
தாயின் நடத்தைக்கும் வருந்தாமல் சிரிப்பதைக் கண்டு அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
ü “உங்கள் குலத்திற்கு மூத்தவர் என்று கருதப்படும் வசிட்டமுனியும்,
அகத்திய முனியும் பிரம்மனுக்கும், தேவகணிகையான திலோத்தமைக்கும் பிறந்தவர்கள் என்பதை
மறந்து விட்டீர்களா? இதை நான் சொல்லவில்லை உங்கள் சாத்திரம் கூறுகிறது. அது பிழையில்லை
என்றால் என் தாய் சாலி செய்ததும் பிழையில்லை. சொல்லுங்கள் வேதங்களில் சிறந்த அந்தணர்களே”
என்றான்.
ü சபை கூடியது. ஆபுத்திரனின் செயல் விசாரணைக்கு வந்தது. பசுவைக்
களவாடியது குற்றம் எனத் தீர்ப்பானது. இனி ஒருவரும் அந்த ஊரில் அவன் ஓடு ஏந்தி வரும்போது
பிச்சை இடக்கூடாது என்று முடிவானது. அவன் தந்தையும் அவனை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
உணவுகொடுத்த ஆபுத்திரன்
· ஊர்மக்கள் அவன் ஓட்டில் அன்னத்திற்குப் பதில் கற்களை இட்டனர்.
ஒருநாள் இரண்டுநாள் பார்த்துவிட்டு, வெறுத்துப்போய் உணவு தேடி மதுரை நகரை நோக்கிச்
சென்றான் ஆபுத்திரன்.
· “அங்கு சிந்தாதேவி கோவிலை அடைந்தான். அங்குள்ள மண்டபத்தில்
தங்கினான். அனைத்து வீதிகளிலும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை
எடுத்தான்.
· அப்படிப் பெற்றுவந்த பிச்சை உணவினை வைத்துக்கொண்டு, ‘கண்
பார்வையற்றவர்களே! காது கேளாதவர்களே! கை, கால்கள் முடமாகிப் போனவர்களே! ஆதரவற்றவர்களே!
நோய்வாய்ப்பட்டவர்களே! வாருங்கள்.... அனைவரும் வாருங்கள்.... உங்களுக்காக மிகுதியான
உணவைப் பிச்சையாகக்கொண்டு வந்துள்ளேன்,’ என்று அனைவரையும் கூவி அழைத்து, அவர்களுக்கு
உணவளித்து, அதன் பிறகு எஞ்சியதைத் தான் உண்டு, அந்தப் பிச்சைப் பாத்திரத்தைத் தலைக்கு
அணையாகக்கொண்டு உறங்கினான்.
· இவ்வாறாக ஆதரவற்றவர்களுக்கு உற்ற துணைவனாகத் தனது காலத்தை
ஆபுத்திரன் மதுரையில் கழித்தான்,” என்று அவனின் வரலாற்றைக் கூறினார் அறவண அடிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன